”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance
எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை வீழ்த்த பாஜக ஒன்று சேர், புரட்சி செய் என்ற MASTER PLAN ஒன்றை கையில் எடுத்துள்ளதாம்... பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே தமிழகத்தில் பின்பற்றுவது சாத்தியமா என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவத்தில்லை.
பீகாரில் செயல்படுத்திய திட்டங்களை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தி, வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாம். இதற்காக பிளவுபட்டுள்ள முக்கிய கட்சிகளை ஒன்றிணைக்கவும் தீவிரம் காட்டி வருகிறதாம். ஆனால், எது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் இரண்டு பிரதான கட்சிகளில் உட்கட்சி பூசல் தான் மிகப்பெரும் பிரச்னையாக நிலவுகிறது. அதனை முடித்து வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை.
பாஜக மிகவும் நம்பி இருக்கும் அதிமுக மற்றும் பாமகவில் உட்கட்சி பூசல் என்பது உச்சகட்டத்தில் உள்ளது. அதிமுகவில் பல முன்னணி தலைவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாமகவில் தந்தை மற்றும் மகன் இடையேயான மோதலால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால், திமுகவிற்கு எதிரான வாக்குகள் அங்கு சிதறுவதை தவிர்க்க முடியாது. அதுபோக, தனது கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளதால், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் திமுக மீதான அதிருப்தியை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுவது என்ற பாஜகவின் திட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கப்போவதில்லை.
அதிமுகவிற்கு துரோகம் செய்ததால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது என்பது சாத்தியமற்றது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசிவருகிறார்.அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ் பேசி வந்தாலும், அதனை அதிமுக காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தனது விருப்பம் என சசிகலா பேசுவதை கட்சி தலைமை பொருட்படுத்துவதே இல்லை.எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே அதிமுக வலுப்பெறும் என டிடிவி தினகரன் பேசி வருகிறார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து ஈபிஎஸ் பேசாதது ஏன்? என செங்கோட்டையன் வாள் சுழற்றி வருகிறார்.அன்புமணியை பாமகவிலிருந்தே நீக்கிவிட்டதகாவும், இனி தானே கட்சியின் தலைவர் எனவும் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸிற்கு இல்லை என்றும், கட்சியின் தலைவராக தொடர்வதாகவும் அன்புமணி பேசி வருகிறார்.
இப்படி, நவக்கிரகங்களை போன்று ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ளக் கூட தயாராக இல்லாத தலைவர்களை தான் ஒருங்கிணைத்து, தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ”ஒன்று சேர், புரட்சி செய்” என்ற பாஜகவின் முயற்சி சாத்தியமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















