TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
சின்னத்திரை நடிகை வைஷாலி 200 யூனிட் மின்சாரம் தனக்கு கிடைக்கவில்லை என வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் சார்பில் விளக்கம் கேட்டால் அவர் பதிலளிக்கவில்லை.

தமிழக அரசு அறிவித்த 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதனால் தான் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோவுக்கு தமிழக மின்சார வாரியம் பதிலளித்துள்ளது.
100 யூனிட் டூ 200 யூனிட் இலவச மின்சாரம்
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த திட்டம் 2021-2026 வரை ஆட்சியில் இருந்த திமுகவாலும் தொடரப்பட்டது. இதனிடையே 2026ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தவெக 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதற்கு 500 யூனிட்டிற்குள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என விதிகள் சொல்லப்பட்டிருந்தது. மேலும் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மட்டுமே இலவசம் எனவும் விளக்கமளித்தது.
எகிறிய மின் கட்டணம் - கொதித்த மக்கள்
இப்படியான நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் பல மடங்கு எகிறியுள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக மின்வாரிய அலுவலர்கள், அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் சில இடங்களில் மின் கணக்கீடு செய்யும் இடங்களில் ஊழியர்களால் குளறுபடி நடந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதேசமயம் மக்களுக்கு மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை விளக்கினால் பிரச்னை தீர்ந்து விடும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டது.
நடிகை வைஷாலி வீடியோ - TNEB விளக்கம்
இந்நிலையில் சின்னத்திரை நடிகை வைஷாலி 200 யூனிட் மின்சாரம் தனக்கு கிடைக்கவில்லை. மிகப்பெரிய அளவில் தான் மட்டுமல்லாமல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை திரும்ப பெற்று பழைய நிலையை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. உடனடியாக மின்வாரிய துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
200 யூனிட் இலவச மின்சாரம் இருக்கா?
அதேசமயம் தமிழக அரசின் தகவல்கள் சரிபார்ப்பு அமைப்பான TN IID வெளியிட்டுள்ள பதிவில், “200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















