Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் அர்ஜூனாவும் ஒன்று சேர்ந்து ஆனந்தை டார்கெட் செய்வதாகவும், நினைத்த தொகுதியில் கூட போட்டி போட முடியாமல் ஆனந்த் திணறுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
தவெக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து களமிறங்குகிறதா என்பது இழுபறியில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கட்சியின் மூன்று முக்கிய புள்ளிகளாக இருக்கும் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இடையே மோதல் வலுத்துள்ளதாக சொல்கின்றனர். தவெக உருவாகும் போதே பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பதவியை ஆனந்திடம் ஒப்படைத்தார் விஜய். களத்திலும் பம்பரமாய் சுழன்ற ஆனந்த் கட்சியில் தனக்கென ஒரு படையையும் உருவாக்கிக் கொண்டார்.
ஆதவ் அர்ஜூனா கட்சிக்குள் எண்ட்ரி கொடுத்ததில் இருந்தே 2 பேருக்கும் இடையே உரசல் இருந்ததாக பேச்சு இருந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது அடுத்த கட்டத்திற்கு சென்று அதிகார மோதல் நடந்து வருவதாக சொல்கின்றனர். ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் ஒன்றுசேர்ந்து ஆனந்தை டார்கெட் செய்வதாகவும், அதனால் அவர் அப்செட்டில் இருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.
சர்வே ஒன்றை நடத்தி தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக சோழிங்கநல்லூரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் ஆனந்த். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக இருந்ததால் அதனை நோக்கி காய்களை நகர்த்தினார் ஆனந்த். ஆனால் அந்த தொகுதிக்கும் வேறு ஒருவரை நிறுத்தலாம் என கள நிலவரத்துடன் கணக்கு காட்டி விஜயை ஆதவ் அர்ஜூனாவும் ஜான் ஆரோக்கியசாமியும் டீல் பண்ணிவிட்டதாக சொல்கின்றனர். அதனால் சோழிங்கநல்லூர் வாய்ப்பையும் இழந்த ஆனந்த் தற்போது தி.நகரை குறிவைத்து வேலை பார்த்து வருகிறாராம். ஆனால் அதற்கும் ஏதாவது சிக்கல் வந்து கைநழுவி போய்விடுமோ என ஆனந்துக்கு பயம் இருப்பதாகவும் பேச்சு இருக்கிறது.
ஏற்கனவே சென்னையில் இருக்கும் தொகுதிகளை குறிவைத்தே ஆதவும், ஆனந்தும் ப்ளான் போட்டு வருகிறார்கள். 2 பேரும் போட்டி போட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். எதிரணியை தாண்டி ஆதவ் ஆனந்திற்கு இடையேயே நீயா நானா போட்டி இருப்பதாக தவெகவினர் மத்தியிலேயே பேச்சு இருக்கிறது.
ஆதவ் அர்ஜூனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் விஜய்யிடம் பல்வேறு புகார்களை அடுக்குவதால் விஜய்யும் ஆனந்தை ஓரங்கட்டுவதாக சொல்கின்றனர். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்வியே ஆனந்த் நடத்திய மீட்டிங்கில் தான் ஆரம்பமானது. மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய மீட்டிங்கில் கூட்டணிக்கு போகலாமா என்று ஆனந்த் கேட்ட கேள்வி தான் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு அடித்தளமாக மாறியது. இந்த விஷயத்தை வைத்து ஆதவ் விஜயிடம் பேசியதால், விஜய்யும் ஆனந்த் மீது கடுப்பில் இருப்பதாக சொல்கின்றனர்.






















