Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
தாழ்த்தப்பட்ட மக்களின் முகம், வழக்கறிஞர், தேசிய கட்சியான பகுஜன் சமாஜின் மாநிலத் தலைவர் என கெத்தாக வலம் கொண்டு கொண்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? கூலிப்படை இவரை கொன்றது ஏன்? வாருங்கள் பார்க்கலாம்...
பெரியாரையும், திராவிட கொள்கைகளையும் தீவிரமாக பின்பற்றி அதனை ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு ஊட்டி வளத்துள்ளார் அவரின் தந்தை. ஆனால் பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், வளர்ந்த பின் தேர்ந்தெடுத்தது அம்பேத்காரின் பாதை.
ஆம் சட்டம் அது ஒன்றால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வாங்கி கொடுத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்பதை சிறு வயதிலிருந்தே உணர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங் பள்ளி படிப்பு முடிந்தவுடன் சட்டப் படிப்பை மேற்கொண்டார், வழக்கறிஞர் ஆனார்..
ஆனால் வழக்கறிஞர் ஆன பிறகுதான் வெறும் சட்டப் போராட்டத்தால் மட்டும் எங்கே விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை உயர்த்தி விட முடியாது, அவர்களை கை தூக்கி விட அரசியல் அதிகாரமும் தேவை என்பதை உணர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங் 2000 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அதன் முதற்கட்டமாக 2006 இல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங். இங்கிருந்து தான் அவருடைய கிராப் எகிறியது, அமைப்பை தொடங்கியவுடன் சுயேட்சையாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அவர், மாமன்ற உறுப்பினராக தேர்வாணார்.
இங்கிருந்து அரசியல் ரீதியாக கவனம் பெற தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட அவர், பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதை கண்டு அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி சரியான ஊதியம் பணியிட பாதுகாப்பு இன்றி பணியாற்றி வருவதை அறிந்து போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் பயனாக 2500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த நினைத்த மாயாவதி, 2007 ஆம் ஆண்டு ஆம்ஸ்டாங்கை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமித்தார்.
அதன்பின் 2011 இல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் போட்டி என தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த ஆர்ம்ஸ்ட்ராங் குறுகிய காலத்திலேயே, முக்கிய அரசியல் புள்ளியாக உருவெடுத்தார்.
ஒரு பக்கம் அரசியலில் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் ரவுடிகள் பலரின் சவகாசமும் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் பாம் சரவணனின் தம்பி தான் தென்னரசு.
ஆர்காடு சுரேஷ் கேங்கிற்க்கும் பாம் சரவணின் கேங்கிற்க்கும் தொடர் மோதல்கள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருக்கமான இவரை 2015 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்துள்ளது.
அதன் பின்னரும் இரண்டும் கேங்கிற்கும் இடையே தகராறு இருந்துக்கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல கூலிப்படை தலைவனான ஆர்காடு சுரேஷ் தென்னரசு கொலைக்கு பழித்தீர்க்கும் வகையில் கொலை செய்யபட்டார்.
அந்த வழக்கில் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி என 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால் இவர்களுக்கு அடைக்களம் கொடுத்தது ஆம்ஸ்ட்ராங் தான் என்ற தகவல்கள் பரவி வந்தன. ஆனால் ஆற்காடு சுரேஷ் வழக்கில், ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கபடவில்லை.
இந்நிலையில் ஆர்காடு சுரேஷின் கொலைக்காக பழித்தீர்க்க காத்திருந்த அவரின் தம்பி புன்னை பாலா மற்றும் கேங், கரெக்ட்டாக ஆர்காடு சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5ம் தேதி வெட்டி சாய்த்துள்ளனர்.
பெரம்பூரில் புதிய வீடு கட்டிவரும் ஆம்ஸ்ட்ராங், தினசரி மாலை அதை சென்று பார்வையிட்டு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று மாலையும், வீட்டை பார்வையிட்டுவிட்டு, தெருவில் தன்னுடைய நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை, 8 பேர் கொண்ட கும்பல் இருச்சக்கர வாகனத்தில் வந்து ஓட ஓட வெட்டி உள்ளது. காப்பாற்ற வந்த ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்களுக்கும் வெட்டு விழுந்துள்ளது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த புன்னை பாலா “தனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல், தன்னையும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதால் தனது மனைவி பயத்தில் பிரிந்து சென்றுவிட்டதாகவும். தற்போது அண்ணனும் இல்லை, மனைவியும் இல்லை. இதனால், அவர்கள் தன்னை கொல்வதற்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள திட்டமிட்டு, சுரேஷின் கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொலை செய்ததாக” வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் விளிம்பு நிலை மக்களின் காவலனாக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்





















