"போராடுவியா நீ.." பெண்ணை அறைந்த DCP கொந்தளிக்கும் போராட்ட களம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீஸ் DCP அதிகாரி கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டடத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறிருக்க கடந்த திங்களன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய வேளையில், போராட்டக்காரர்கள் பலரும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது டெல்லி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இளைஞர்கள் மீதான இத்தகைய தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பியபோது இரு அவைகளையும் சபாநாயகர்கள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், திங்களன்று போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலின்போது, போலீஸ் உயரதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் போலீஸ் அதிகாரி டெல்லியின் வடகிழக்கு பகுதியின் கூடுதல் துணை காவல் ஆணையர் சந்தீப் லம்பா என்றும் தெரியவந்துள்ளது.
கரப்பான் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் சிங் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இதே அதிகாரிதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி வாங்சுக்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்தவர். சந்தீப் லம்பா mentally போலீஸில் பணியாற்றுவதற்கே தகுதியற்றவர்" என்று பதிவிட்டிருக்கிறார்.
அதேவேளையில் சந்தீப் லம்பா இதுகுறித்து தனியார் ஊடகத்திடம், "அந்தப் போராட்டத்தில் என்னுடைய சீருடை கிழிக்கப்பட்டது. முழங்காலில் கல்லடிபட்டது" என்று கூறியிருக்கிறார்.
ஆனால், வைரலான அந்த வீடியோவில் பெண்ணை அவர் அறைந்துவிட்டு நன்றாகத்தான் நடந்துவருகிறார். அவரின் சீருடையும் கிழியவில்லை.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தீப் லம்பாவை கண்டித்துள்ளனர்.
மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையதளவாசிகள் எப்படி அவர் பெண்ணை அறையலாம் என்று கண்டித்து, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















