"NEETஐ முழுசா ரத்து பண்ணுங்க +2 மார்க்ஸ் அடிப்படையில்.." மத்தியஅரசுக்கு விஜய் கடிதம்
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழக முதல்வர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், மருத்துவ சேர்க்கைக்கான இடங்களை 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
2026-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் மே 3-ம் தேதி 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1.4 லட்சம் பேர் உட்பட மொத்தமாக சுமார் 22 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
இவ்வாறிருக்க, வினாத்தாள் கசிவால் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது குறித்த அறிக்கையில், "வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது.
மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் FIR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது.
இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.
நீட் (NEET) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயூஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கவும், ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்" விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















