பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில், பாசன வாய்க்காலின் குறுக்கே அமைந்துள்ள சிறிய பாலத்தின் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து கீழே சாய்ந்து கிடக்கிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால் பாலம் இரும்பு தடுப்புகளை உடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில், பாசன வாய்க்காலின் குறுக்கே அமைந்துள்ள சிறிய பாலத்தின் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து கீழே சாய்ந்து கிடப்பதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய விவசாய மண்டலமாக விளங்கும் வெள்ளாம்பெரம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்தச் சாலை ஒரு முக்கிய இணைப்புப் பாதையாகத் திகழ்கிறது. தினமும் நூக்கணக்கான விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும், விவசாயப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் இந்த வழியையே பெரிதும் நம்பியுள்ளனர்.
வயல்வெளிகளுக்கு நடுவே செல்லும் இந்தச் சாலையின் குறுக்கே உள்ள பாசன வாய்க்காலின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் இருபுறமும், வாகனங்கள் வாய்க்காலில் கவிழ்ந்து விடாமல் தடுப்பதற்காக உலோகத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததாலும், காலப்போக்கில் ஏற்பட்ட துருப்பிடித்தல் காரணத்தினாலும், பாலத்தின் ஒருபுறம் உள்ள தடுப்பு முழுமையாகப் பெயர்ந்து நிலத்தில் சாய்ந்து கிடக்கிறது. மற்றுமொரு புறம் உள்ள தடுப்பும் துருப்பிடித்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயகரமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில் இந்தச் சாலையில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால், எதிர்வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் ஓட்டுநர்களுக்குச் சாலையின் விளிம்பும், பாலத்தின் ஆபத்தான நிலையும் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தறிக்கெட்டு வாய்க்காலில் கவிழும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்தச் சாலை விவசாயப் பணிகளுக்கும், பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும். பாலத்தின் தடுப்புகள் பெயர்ந்து விழுந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகல் நேரத்திலேயே சற்றே கவனக்குறைவாக இருந்தால் வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் புதியதாக இந்த வழியில் வருபவர்கள் நிச்சயம் விபத்தில் சிக்கக்கூடும். பெரும் அசம்பாவிதம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து இதை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பெயர்ந்து கிடக்கும் இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட்டு, புதிய மற்றும் பலமான பாதுகாப்புத் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. மேலும், பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு, மின்விளக்கு வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், முக்கியமான வழித்தடமாக உள்ள இந்த சாலையில் பாசன வாய்க்கால் பகுதியில் தடுப்பாக உள்ள இந்த இரும்பு பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளது. இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனத்திற்காக வழி விட ஒதுங்கினால் இதில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றனர்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















