Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
பெரம்பூரில் சாலையில் கிடந்த சூட்கேஸில் தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உள்ளாடையை வைத்தே கொலைக்கான மர்மத்தை போலீசார் உடைத்துள்ளனர். விசாரணையில் கொலை நடந்தது எப்படி என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை அருகே கிடந்த நீல நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக ஜூன் 5-ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை திறந்து பார்த்த போது தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஆணின் உடற்பகுதி மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவியை வைத்து விசாரணை வேகமெடுத்தது.
உடலை பரிசோதித்த போது பார்கோட் கொண்ட ஓர் உள்ளாடையை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பார்கோட் பெரம்பூரில் இருந்த துணிக்கடை ஒன்றுக்கு அழைத்து சென்றது. அங்கு சென்று ஆய்வு செய்த போது பெண் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வழக்கமான அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படாமல் மெசேஜ் செயலிகளுக்கு மூலம் மட்டும் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்புடைய பெண்ணை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அந்தப் பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிமா (36) என அடையாளம் காணப்பட்டார். மேலும் உயிரிழந்தவர் அவரது கணவர் அமீர் அலி (37) என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்த தம்பதியினர் 2022 முதல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். அப்போது சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான அஷ்ரப் என்பவருடன் ரோஹிமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து அமீர் அலியைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி இரவன்று, அமீர் அலிக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, பின்னர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, உடற்பாகங்களை தனித்தனி பைகளில் அடைத்துள்ளனர். உடலின் நடுப்பகுதி சூட்கேஸுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி அதிகாலையில் அந்த சூட்கேஸை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தலை செங்கல்பட்டு மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீதமுள்ள உடற்பாகங்களை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















