35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதார் அர்ஜுனா தனது வேப்பமனு பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள் தொடர்பாக குளறுபடி செய்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட அவரின் வேட்பு மனு தற்போது ஏற்கப்பட்டுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்குகிறது.
கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
அதேபோல், தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை குழுவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த ஆதவ் அர்ஜுனா, தனது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 197 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், தன்னிடம் கையிருப்புத் தொகையாக 1.69 கோடி இருப்பதாகவும், தன்னுடைய மனைவியின் பெயரில் 245 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதவ் தனது மனைவிக்குத் தொடர்புடைய சுமார் 35 நிறுவனங்களை பிரமாணப் பத்திரத்தில் மறைத்திருப்பதாகவும், வங்கிகளில் இருப்பு வைத்திருக்கக் கூடிய வருமானத்தை மறைத்திருப்பதாகவும் வில்லிவாக்கம் சுயேச்சை வேட்பாளர்கள் புகார் எழுப்பியிருக்கின்றனர்.
மேலும், சுமார் 2 கோடி ரூபாய் கையிருப்பு வைத்திருக்கும் ஆதவ் அவர் அதை வாக்காளர்களுக்கு கொடுக்கக் கூடும் என்றும் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், தேர்தல் பார்வையாளர் வரும் வரை அவரின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இறுதியில் பரிசீலனைக்குப் பின்னர், அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாக வேட்புமனு ஏற்கப்பட்டது.























