ENG vs NEP: பயத்தை காட்டிட்டாங்க பரமா.. கடைசி பந்து வரை அச்சுறுத்திய நேபாளம்! இங்கிலாந்து த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மும்பையில் இன்று நடந்த போட்டியில் நேபாளம் - இங்கிலாந்து அணிகள் மோதியது. பலமிகுந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பந்துவீசிய நேபாளம் அணி சவால் தரும் வகையில் பந்துவீசியது. பெத்தேல், ஹாரி ப்ரூக்கின் அரைசதத்தால் நேபாளத்திற்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
போராடிய நேபாளம்:
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளத்தை எளிதாக சுருட்டிவிடலாம் என்று எண்ணிய இங்கிலாந்து அணிக்கு நேபாளம் தண்ணி காட்டியது. தொடக்க வீரர் ஆசிஃப் 7 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் குஷல் படேல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கேப்டன் ரோகித் ஒத்துழைப்பு அளிக்க, குஷல் படேல் 29 ரன்களில் அவுட்டாக அடுத்து ரோகித் - திபேந்திரா ஜோடி சேர்ந்தனர்.
ரோகித் நிதானமாக ஆட திபேந்திரா பவுண்டரியாக விளாசினார். இந்த ஜோடி நேபாளத்தை மீட்டது. இங்கிலாந்து அணிக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடியை சாம் கரண் பிரித்தார். அவரது பந்தில் திபேந்திரா அவுட்டானார். அவர் 29 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
லோகேஷ் போராட்டம்:
அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் கேப்டன் ரோகித் 39 ரன்களில் அவுட்டாக, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. ஆனால், டெயிலண்டரில் வந்த லோகேஷ் நேபாளம் அணிக்காக போராடினார். ஆர்ச்சரின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி இங்கிலாந்தின் இதயத்துடிப்பை எகிறவைத்தார்.
30 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற நிலையை மாற்றி, 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார் லோகேஷ். ஆனால், கடைசியில் நேபாளம் அணியை அவரால் வெற்றி பெற வைக்க இயலவில்லை. கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
பயமுறுத்தும் கத்துக்குட்டி அணிகள்:
லோகேஷ் பாம் 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடில் ரஷீத் 3 ஓவர்களில் 42 ரன்களையும், ஆர்ச்சர் 4 ஓவர்களில் 42 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். லியாம் டாவ்சன் 4 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
டி20 உலகக்கோப்பை நேற்று தொடங்கியது முதலே கத்துக்குட்டி அணிகள் என கருதப்பட்ட நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் பலமிகுந்த அணிகளான பாகிஸ்தான், இந்தியாவிற்கு பயத்தை காட்டின. இன்று இங்கிலாந்து அணிக்கு நேபாளம் இறுதிவரை தோல்வி பயத்தை காட்டியது. இந்த டி20 உலகக்கோப்பையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான ஆட்டத்தை காணலாம் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.




















