"இந்த வீரர்கள் 2024-ஆம் ஆண்டில் வேண்டாம்… அப்புறம் ரிசல்ட்டும் இதேதான்", எச்சரிக்கும் விரேந்திர சேவாக்!
சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வரும் முன்னரே சேவாக் இதுகுறித்து கணித்திருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியில் கடுமையான மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விரும்புகிறார்.
இந்திய அணியின் தோல்வி
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, இவ்வருடம் கோப்பையை வென்ற நிலையில் முன்னதாக, அடிலெய்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருதிப்போட்டிக்கு சென்றது. இந்த போட்டியில் தோல்வி பெற்றது ஒருபுறம் என்றாலும், ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது பலரையும் வருந்தச் செய்தது. கடைசியாக தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபி வாங்கித்தந்தார். அதன் பிறகு ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணிக்கு அடுத்த வாய்ப்பு அடுத்த வருடம்தான். அப்போது இந்திய அணி கோப்பை வென்று 10 வருடம் ஆகியிருக்கும். இந்த கடும் தோல்வியால் கடுப்பான பிசிசிஐ தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால்தான் அடுத்த டி20 உலகக்கோப்பையின்போது பல வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் (ஆறு போட்டிகளில் 128 ரன்கள்) மற்றும் ரோஹித் ஷர்மாவின் (ஆறு ஆட்டங்களில் 116 ரன்கள்) சரியா ஆடாததால் இந்திய அணியின் ரன் வேகம் வெகுவாக குறைந்துள்ளது, குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் இந்தியா இவர்கள் இருவரால் மட்டுமே சொதப்பி வருகிறது. பவர்பிளே ஓவர்களில் 24.11 என்ற சராசரியில் இந்தியா 6 போட்டிகளில் 217 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது வருந்தத்தக்க விஷயம்தான். அந்த ஓவர்களில் இந்தியாவின் ஸ்ட்ரைக் ரேட் 95.85 ஆக இருந்தது.
பவர்பிளே ஓவர்களில் இந்தியாவை விட ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் கூட அதிகம் ரன்கள் குவித்துள்ளன. ரிஷப் பந்த் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற இளம் வீரர்களை விட ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களை வைத்து விளையாடியது ஆச்சரியம்தான். பந்த் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி உட்பட ஓரிரு போட்டிகளில் விளையாடினார் என்றாலும், சாஹல் ஒரு போட்டி கூட விளையாடமால் இருந்தார்.
இதே முகங்கள் வேண்டாம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான மாற்றங்களைப் பரிந்துரைக்கும் போது, சேவாக் பேசுகையில், "நான் சிந்தனை மற்றும் செயல்பாட்டில் மாற்றங்களை விரும்பவில்லை, ஆனால் அணியில் மாற்றங்களை விரும்புகிறேன். அடுத்த உலகக் கோப்பையில், சில முகங்களை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன்", என்றார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் பதிப்பை எம்எஸ் தோனியின் இளம் அணி வென்றதற்கு ஒரு உதாரணத்தை சேவாக் மேற்கோள் காட்டினார். தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்த தொடக்கத்தொடரில் வெற்றி பெற்ற இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்த முன்னாள் இந்திய வீரர் சேவாக், எதிர்காலத்திற்கான இளம் டி20 ஐ அணி தேவை என்று கூறினார்.
எதிர்ப்பார்பில்லாத புதிய அணி வேண்டும்
"2007-ஆம் ஆண்டில் இதேபோன்ற முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக விளையாடியவர்கள் அங்கு (தென்னாப்பிரிக்காவில்) செல்லவில்லை. மேலும் இளம் வீரர்கள் சென்றனர். துவக்கத்தில் அந்த அணி மீது யாருக்கும் நம்பிக்கையே இல்லை. அதே போல இந்தியா அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடும் போது, இந்த அணி வெல்லும் என்ற நம்பிக்கை யாருக்கும் இருக்கக்கூடாது, அதுதான் எதிர்காலத்திற்கான அணியாக இருக்கும். இன்றைக்கே எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் நினைத்தால், அதற்குள் அணியை தயார் செய்யலாம். ஆய்வு செய்ய இரண்டு ஆண்டுகள் உள்ளன, சில மூத்த வீரர்கள் உள்ளனர், அவர்களின் செயல்திறன் போட்டிக்கு ஏற்றதாக இல்லை, அவர்கள் அடுத்த உலகக்கோப்பையில் விளையாட மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
தேர்வுக் குழு மாற்றம் குறித்து..
சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வரும் முன்னரே சேவாக் இதுகுறித்து கணித்திருந்தார். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் தேர்வுக் குழுவில் மாற்றம் ஏற்படும் என்பது குறித்து சேவாக் கூறியதாவது, "இது தேர்வாளர்களின் முடிவு, ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால், அடுத்த டி20 உலகக் கோப்பை வரை அதே தேர்வாளர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். புதிய தேர்வாளர்கள் இருந்தால் சில வித்தியாசமான சிந்தனை இருக்கும். ஆனால் அடுத்த உலகக் கோப்பையிலும், நீங்கள் அதே வீரர்களுடனும் மனநிலையுடனும் சென்றால், முடிவுகள் ஒரே மாதிரியாகதான் இருக்கும்." என்றார்.
அவர் சொன்ன அடுத்த நாளே தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்கது. இந்தியா தற்போது நியூசிலாந்தின் மைதானத்தில் ஆறு லிமிட்டட் ஓவர் போட்டிகளில் (மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள்) விளையாடி வருகிறது. வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நேற்று நடக்க இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முழுக்க முழுக்க இளம் வீரர்கள் குழு ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்க இருந்தது. இந்த அணியை மெதுவாக ஷேப் செய்து ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 உலகக்கோப்பையில் இந்தியா களம் காணும் என்பது பலர் கூறும் கருத்தாக இருக்கிறது. அதனை நேற்று ஹர்திக் பாண்டியாவும் கூறி இருந்தார். 2024 உலகக்கோப்பைக்கான முதல் அடி இது என்று போட்டிக்கு முன்னதாக கூறினார்.