LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Shortage News in Tamil: இனி மின்சார அடுப்புகள்தான்; எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஐஆர்சிடிசி அதிரடி உத்தரவு

மத்தியக் கிழக்கு நாடுகளின் போர் எதிரொலியாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க, மைக்ரோவேவ் ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் உள்ளிட்ட மின்சார அடுப்புகளுக்கு மாற ஐஆர்சிடிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, உலகளாவிய சரக்கு விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவுக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும் சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் தாமதமாகி வருவதுடன், கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்த நெருக்கடியான சூழலைச் சமாளிக்கும் வகையில், ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் அனைத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் சமையல் நிறுவனங்களும் உடனடியாக சமையல் எரிவாயு பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்துவிட்டு, மின்சார அடிப்படையிலான மாற்றுச் சமையல் முறைகளுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரச் சாதனங்கள்
தினசரி பல லட்சக்கணக்கான பயணிகளுக்கு உணவளிக்கும் பொறுப்பை ஐஆர்சிடிசி ஏற்றுள்ளதால், இந்த விநியோகத் தட்டுப்பாடு பயணிகளை எந்த வகையிலும் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்வது ரயில்வே துறைக்கு பெரும் சவாலாகும். எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக, மைக்ரோவேவ் ஓவன்கள் (Microwave) மற்றும் இண்டக்ஷன் அடுப்புகள் (Induction Stoves) போன்ற மின்சாரச் சாதனங்களைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தனியார் உணவகங்கள் பலவும் விறகு மற்றும் மின்சார அடுப்புகளை நாடி வரும் சூழ்நிலையில், ஐஆர்சிடிசியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவும் இந்தப் போர்ப் பதற்றம் தணிந்து, நிலை சீரடையும் வரை, அனைத்து உணவு விநியோகஸ்தர்களும் இந்த வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஐஆர்சிடிசி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
























