UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
யுபிஎஸ்சி சிஏபிஎஃப் உதவி கமாண்டன்ட் 2026: 349 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 12) கடைசித் தேதி ஆகும். துணை ராணுவப் படைகளில் அதிகாரியாகப் பணியாற்ற விரும்பும் தகுதியான பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியிட விவரங்கள்
இந்த ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 349 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில்,
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) - 108,
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) - 106,
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) - 70,
சசஸ்த்ர சீமா பல் (SSB) - 53
இந்தோ- திபெத்திய எல்லைப் போலீஸ் (ITBP) - 12 என ஐந்து முக்கியப் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
எனினும், அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் உரிய தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முறை எப்படி?
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (PET), மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணல் எனப் பல கட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன் முதல் கட்டமான எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த செயல்முறைக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in வாயிலாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 12-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
























