பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் 10 நாள் நிகழ்வாக முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களில் தற்போதைய ஆதீனகர்த்தர் வழிபாடு நடத்தினர்.

தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனகர்த்தரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை திருமடம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

பட்டணப் பிரவேசம்
இதில் 11-ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் தருமை ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.

விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை
இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது.

நாடுமுழுவதும் பிரபலம்
வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகின்றனர். உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியும் பிரபலம் அடைந்துள்ளது.
இந்தாண்டு விழா
இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 9 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 10-ஆம் நாள் விழாவான இன்று தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளிய ஆதீனம்
இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11 -ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















