மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற முக்கிய திருவிழா என்ன தெரியுமா..?
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்.

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் தருமபுரம் ஆதீனகர்த்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை திருமடம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

பட்டணப் பிரவேசம்
இதில் 11-ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் தருமை ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.
விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை
இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது.

நாடுமுழுவதும் பிரபலம்
வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகின்றனர். உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியும் பிரபலம் அடைந்துள்ளது.
இந்தாண்டு விழா
இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 9 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

தேரை வடம்பிடித்து இழுத்த ஆதீனம்
அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு மேற்கொண்டார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு தற்போதைய ஆதீனம் நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் தற்போதைய ஆதீனத்தை பக்தர்கள் சிவிகைப் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லும் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது.






















