Thaipoosam: வேண்டியதை நிறைவேற்றும் தைப்பூசம் விரதம்.. வீட்டில் முருகனை வழிபடுவது எப்படி?
தைப்பூசம் நன்னாளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வழிபட்டு அருகே இருக்கும் முருகன் கோயிலுக்கு செல்லலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஏராளமான வழிபாட்டு கடவுள்கள் உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஏதேனும் ஒரு நாள் விசேஷமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை திதிகள் தொடங்கி, வாரத்தில் ஒரு நாள் வரை கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விசேஷம் வரும். அந்த வகையில் தை மாதத்தில் வரும் தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப் பெருமானின் அருளை பெற, வேண்டிய விஷயங்கள் இனிதே நடந்தேற இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இப்படியான தைப்பூசம் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் பழனியில் தான் வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த நன்னாளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வழிபட்டு அருகே இருக்கும் முருகன் கோயிலுக்கு செல்லலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தைப்பூச நாளில் பௌர்ணமி திதியானது பிப்ரவரி 1ம் தேதி காலை 4.41 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி காலை 4.43 மணி வரை இருக்கும். அதேபோல் பூசம் திதி அதிகாலை 1.54 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி அதிகாலை 1.01 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாள் முழுவதும் இரு திதிகளும் இருப்பதால் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் முருகப்பெருமானை வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வழிபடுவது எப்படி?
தைப்பூசம் நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். புதிய அல்லது சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். நேராக பூஜையறை சென்று அங்கு நெற்றியில் விபூதி பட்டையிட்டு முருகப்பெருமானை வணங்கி விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் முருகனுக்குரிய பொருட்களை எல்லாம் படைத்து விளக்கேற்றி வழிபடலாம். வீட்டில் முருகன் படம், சிலை, வேல் ஆகியவை வைத்து வழிபடலாம். அதேபோல் முருகனுக்குரிய பூக்களான செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைக்கலாம். நைவேத்தியமாக தேன், திணை மாவு போன்றவை படையலிடலாம். விரதமிருப்பவர்கள் இருவேளை உணவு எடுத்துக் கொள்ளாமல் நோன்பை தொடரலாம்.
மாலையில் வீட்டில் விரதம் முடிக்கும்போது முருகனுக்கு தீபம், தூபம் காட்டி வழிபட வேண்டும். நைவேத்தியமாக வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் கோயில் அல்லது முருகன் சன்னதிக்கு சென்று அங்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறைந்தப்பட்சம் பால், சந்தனம் வழங்கலாம்.
வீட்டில் வழிபடும்போது முருகன் படம் முன் ஷட்கோண கோலமிட்டு அதில் ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அப்போது முருகனுக்குரிய மந்திரம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















