Garuda Sevai: காஞ்சிபுரம் எங்கும் கோவிந்தா கோஷம்...! தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் தரிசனம்..!
Garuda Sevai: "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது"

வரதராஜ பெருமாள் கோவில் 3-ஆம் நாள் உற்சவம் தங்க கருட சேவை வாகனத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள். வழிநெடுங்க பக்தர்கள் தீபாராதனை செய்து 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்
வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருட சேவை உற்சவம் மூன்றாம் நாள் காலையான இன்று நடைபெற்றது.
கருட சேவை
கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஊதா நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், செண்பகப்பூ மனோரஞ்சித பூ மல்லிகை பூ மற்றும் பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து, மஞ்சள் பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில்மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க,வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, நீல பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து நம்மாழ்வார்,ராமானுஜர்,தேசிகர் சன்னதிகளில் மரியாதையை ஏற்று கொண்டு கோபுர வாசலில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை செய்து கொண்டு கோபுர தரிசனம் தந்தார்.
காஞ்சிபுரத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
இதனைத் தொடர்ந்து ஐந்து மணி அளவில் தங்க கருட வாகனத்தில் இரட்டை குடையுடன் சன்னதி வீதி வழியாக திருவீதி உலா புறப்பட்டார். தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு செட்டி தெரு, திருக்கச் நம்பி தெரு, ரங்கசாமி குளம், விளக்கொளி பெருமாள் கோவில் தெரு வழியாக தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தேசிகர் மரியாதையை ஏற்று, பின்னர் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு வழியாக மேற்கு ராஜ வீதியில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் அருகே வருகை தந்த பெருமாளுக்கு குடை மாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டான் மண்டபம் ஆஞ்சநேயர் கோவிலில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அங்கிருந்து பூக்கடை சத்திரம் கிழக்கு ராஜ வீதி காமராஜர் சாலை, காந்தி ரோடு வழியாக மதியம் 2 மணி அளவில் கோவிலுக்கு வந்தடைவார்.
தங்க கருட வாகனத்தில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பூர ஆரத்தி காட்டி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
முக்கிய உற்சவங்கள் நடைபெறும் நாட்கள் .
மே மாதம் 14 ஆம் தேதி (14.05.2025 ): நாக வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் , காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா தரிசனம் தருகிறார்.தொடர்ந்து நெல் அளவை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
மே மாதம் 15 ஆம் தேதி (15.05.2025 ): தங்க பல்லாக்கு உற்சவம் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை வேலையில் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.
மே மாதம் 16 ஆம் தேதி (16.05.2025 ): ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். இதனை தொடர்ந்து சொர்ண அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை வேலையில் யானை வாகனத்தில், வீதி உலா மற்றும் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.
மே மாதம் 17 ஆம் தேதி (17.05.2025): விழாவின் பிரதான திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில் உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
மே மாதம் 18 ஆம் தேதி (18.05.2025): பகல் 2:30 மணி அளவில் தொட்டி திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மே மாதம் 19- ஆம் தேதி (19.05.2025): ஆள்மேல் பல்லாக்கு (மட்டை அடி உற்சவம்) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.





















