Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

தமிழில் உள்ள ஒவ்வொரு மாதங்களும் ஆன்மீக தன்மை நிறைந்தது. குறிப்பாக, ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் கிழமைகள் எந்தளவு சிறப்பு வாய்ந்ததோ, அந்த அளவிற்கு மிகவும் புகழ்பெற்றது ஆடிப்பெருக்கு எனப்படும் ஆடி 18 ஆகும்.
ஆடிப்பெருக்கு:
தமிழ்நாடு முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் புண்ணிய தலங்களின் அருகே உள்ள நதிக்கரைகள் அருகே பக்தர்கள் அதிகாலையிலே நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நன்னாளில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே காணலாம்.
தர்ப்பணம்:
ஆடிப்பெருக்கு நன்னாளில் அதிகாலையிலே புண்ணிய தலங்கள் அருகே உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். நதிகள், குளம், கடல் ஆகிய நீர்நிலைகள் அருகே ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் அளிப்பார்கள். காவிரி கரையோரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அதிகளவில் தர்ப்பணம் அளிப்பார்கள்.
தாலிக்கயிறு மாற்றுதல்:
ஆடிப்பெருக்கு என்றால் அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது தாலிக்கயிறு மாற்றுதலே ஆகும். புதியதாக திருமணமான தம்பதியினர் இந்த நன்னாளில் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளான நாளை காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரையில் தாலி மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது.
அன்னதானம்:
ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்தாண்டு சிவபெருமானுக்கு உகந்த சோமவாரத்தில் இந்த ஆடிப்பெருக்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். கோயில்களில் அதிகளவு பக்தர்கள் வருவதை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானம் கோயில்கள் சார்பாகவும், பக்தர்கள் சார்பாகவும் அதிகளவு வழங்கப்பட உள்ளது. அன்னதானம் வழங்குவதும் புண்ணியம் என்பதால் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
மங்கல பொருட்கள் வாங்க வேண்டும்:
ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்கினால் சிறப்பு என்று கூறுவார்கள். மங்கல நாளான இந்த ஆடிப்பெருக்கு நாளில் தங்கம் வாங்கினால் மேலும் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. தங்கம் வாங்க இயலாதவர்கள் கல் உப்பு, மஞ்சள் வாங்குவது சிறப்பாகும். இது வீட்டின் செல்வத்தை அதிகரிக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
வீட்டில் என்ன செய்ய வேண்டும்?
ஆடிப்பெருக்கு நாளான நாளை வீட்டிலே சாமி கும்பிடும் வகையில், காலையிலே எழுந்து வீட்டை கழுவி சுத்தப்படுத்தி நீராட வேண்டும். பின்னர், வீட்டின் பூஜையறையில் மஞ்சளில் விநாயகரைப் பிடித்து வழிபாடு செய்ய வேண்டும். வாழையிலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் படையலிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















