அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாமாகுடி ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மாமாகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் திருக்கோவிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாவான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்தும், சுவாமி தரிசனம் செய்தும் அம்மனின் அருளைப் பெற்றனர்.
பத்து நாள் உற்சவம் மற்றும் வீதி உலா
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் இத்திருக்கோவில் தீமிதி பெருவிழா, கடந்த 23-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் முறைப்படி தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.
பெருமாள் கோயில் குளக்கரையில் சக்தி கரகம் புறப்பாடு
தீமிதி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாலை விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாமாகுடி பெருமாள் கோயில் குளக்கரையில் ஒன்று திரண்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்தி கரகம் மற்றும் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. காப்பு கட்டி, கடுமையான விரதமிருந்த பக்தர்கள் சக்தி கரகம் முன்னே செல்ல, மேளதாள வாத்தியங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
பக்தி பரவசத்தில் தீமிதித்த பக்தர்கள்
சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது. கோவில் வளாகத்தின் எதிரே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டதும், முதலில் சக்தி கரகம் ஏந்திய பூசாரி தீக்குண்டத்தில் இறங்கி தீமிதியை தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தியுடன் அம்மா மகமாயி..." என்ற பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க, ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சில பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகக் குழந்தைகளை ஏந்தியபடியும், அலகு குத்தியபடியும் தீமிதித்து பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பு வீதி உலா மற்றும் அன்னதானம்
தீமிதி விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இரவு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மாமாகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாமாகுடி கிராம முக்கியஸ்தர்கள், திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ட்ரெண்டிங் செய்திகள்























