Pahalgam Terror Attack: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பதறிய உலகத் தலைவர்கள் கூறியது என்ன தெரியுமா.?
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட உலகத் தலைவர்கள் கூறியது என்ன என்று பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உலகத் தலைவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலை நடத்தினர். அப்போது சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், 28 பேர் இறந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார் அமித்ஷா.
கடும் கண்டனங்களை தெரிவித்த உலகத் தலைவர்கள்
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காஷ்மீரில் இருந்து வந்த செய்தி மிகவும் கலையடையச் செய்வதாக உள்ளது என்றும், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியுடன் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அற்புதமான இந்திய மக்களுக்கு முழு ஆதரவை தெரிவிப்பதுடன், ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், எங்கள் இதயங்கள் உங்களோடு உள்ளது எனவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு காஷ்மீர் தாக்குதல் குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பிரதமர் மோடியுடன் பேசுவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், இந்த தாக்குதல் கடும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். தானும் தனது மனைவி உஷாவும், இந்த தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும், தங்கள் எண்ணமும், பிரார்த்தனையும் அவர்களுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான தாக்குதலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ள அவர், இதை திட்டமிட்டவர்களும், குற்றவாளிகளும் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில், இந்தியாவிற்க்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் புதின் கூறியுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் நடந்தபோது, சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, இன்று நாடு திரும்புகிறார். இந்நிலையில், சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இந்த கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நிற்பதாகவும், தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், இலங்கை, இத்தாலி, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளும், காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளன.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

