DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அரசை விமர்சித்த காங். நிர்வாகி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், திமுக அரசின் செயல்பாட்டை விமர்சித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பதிவு ஓன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசை விட உத்தரபிரதேச அரசின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தியிடமும் வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புகார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி புகார் அளித்துள்ளதாக செய்தி படித்தேன், இதன் ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது:
காங்கிரஸ் நிர்வாகி மீது திமுக கூட்டணி கட்சி புகார்
காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.
உட்கட்சி பிரச்சனையில் தலையிடுவதா.?
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது.கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.





















