ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை.! வங்கதேச நீதிமன்றம் அதிரடி- குற்றச்சாட்டு என்ன.?
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா- தீர்ப்பு
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர் அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சியை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5, 2024 அன்று தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவுக்கு அடைக்களம் தேடி வந்தார். முன்னதாக வங்கதேசத்தில் மாணவர் கலவரங்களை அடக்குவதற்காக அரசு நடத்திய வன்முறை சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை
போராட்டக்காரர்களை கொலை செய்ய உத்தரவிடுதல், சொந்த நாட்டு மக்களை கொலை செய்ய ஆயுதங்கள் பயன்படுத்த உத்தரவிடுதல் மற்றும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க தவறுதல் என ஷேக் ஹசீனா எதிரான குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் அரசுக்கு எதிராக போராடுபவர்களை சுட்டுக்கொல்லுமாறு ஷேக் ஹசீனா கூறியதாக ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா மீதான மூன்று குற்றங்களில் குற்றவாளி என வங்கதேஷ சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. 453 பக்கங்களுக்கான தீர்ப்பில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் எனவும் ஹசீனா "முதன்மை குற்றவாளி" என்று கூறப்பட்டது. தற்போது தீர்ப்புக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




















