Bus Accident: கோர விபத்து..! கவிழ்ந்த பேருந்து, எடுக்க எடுக்க கிடைத்த பிணங்கள் - 51 சடலங்கள் கண்டெடுப்பு
Bus Accident: கவுதமாலாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bus Accident: கவுதமாலாவில் பேருந்தானது பாலத்தில் இருந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்து விபத்து:
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில், ஒரு பேருந்து பாதுகாப்பு சுவற்றில் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இது லத்தீன் அமெரிக்காவில் பல ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாகும் மீட்பு படையினர் குறிப்பிடுகின்றனர். 70க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக நகராட்சி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. பேருந்தானது பாலத்தில் இருந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் சரிந்து விபத்துக்குள்ளானது.
51 பேர் உயிரிழப்பு:
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் விக்டர் கோம்ஸ், "தற்காலிக பிணவறையில் 51 உடல்கள்" இருப்பதை உறுதிப்படுத்தினார். மீட்புப் பணியாளர்கள் ஏற்கனவே இடிபாடுகளில் இருந்து காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, "பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு உலோகத் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, சுமார் 20 மீட்டர் (65 அடி) ஆழமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து, கழிவுநீர் கலந்த நதியை அடைந்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தீயணைப்புத் துறையினர் கூறுகையில், ”பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பல சிறிய வாகனங்களின் மீது மோதிய பின்னரே தடுப்புச் சுவற்றில் இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய துக்கம் அனுசரிப்பு:
கவுதமாலா அதிபர் பெர்னார்டோ அரேவலோ இந்த துயரச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, குறிப்பிடப்படாத தேசிய துக்கக் காலத்தை அறிவித்தார். மேலும், "இன்று கவுதமாலா தேசத்திற்கு ஒரு கடினமான நாள்" என்றும் குறிப்பிட்டார். குப்பைகளால் நிரப்பப்பட்ட சேற்று நீரில் இருந்து எடுக்கப்பட்ட உடல்களை, ஸ்ட்ரெச்சர்களில் சாய்வில் கடந்து செல்லும் தீயணைப்பு வீரர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பேருந்து விவரம்:
உள்ளூர் ஊடக தகவல்களின்படி, பேருந்து எல் ப்ரோக்ரெசோ துறையில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் சென்று கொண்டிருந்தது. பேருந்து 30 ஆண்டுகள் பழமையானது என்றாலும், அதற்கு இன்னும் இயக்க உரிமம் இருப்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாலை விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டிருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறதும்
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் சாலை விபத்துகள் பொதுவானவை. ஜனவரி 2018 இல், பெருவில் தலைநகர் லிமாவின் வடக்கே கடற்கரையில் ஒரு பேருந்து பாறையிலிருந்து கவிழ்ந்ததில் 52 பேர் கொல்லப்பட்டனர். பிரேசிலில், தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் மார்ச் 2015 இல் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர்.

