Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
தமிழ்நாட்டில் விடுபட்ட பெண்களுக்கு வரும் 12ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் வெற்றியையே தேர்தல் பரப்புரையில் முக்கிய வாதமாக எடுத்து வைக்க திமுக முடிவு செய்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முக்கியமான திட்டமாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான மகளிருக்கு மட்டுமே ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் ரூபாய் 1.15 கோடி மகளிர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த சூழலில், ரூபாய் 1.15 கோடி மகளிர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத் தொகை பெற முடியாத பல பெண்களும் தாங்களும் தகுதியானவர்கள் என்பதால் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
12ந் தேதி முதல் அதிகரிப்பு:
இந்த சூழலில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 12ம் தேதி முதல் கூடுதலாக விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் தீவிரம்:
இதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் ஓரளவு முடிந்துள்ளது. 12ம் தேதி விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த உரிமைத் தொகை வரும் தேர்தலில் திமுக-விற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் பலரும் பயனடைந்துள்ளனர். தற்போது இந்த உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் திமுக-வின் வாக்கு வங்கி வரும் தேர்தலில் அதிகரிக்கும் என்றே அரசியல் நிபுணர்களும் கணித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் மகளிர் வாக்குகளை குறிவைத்து மகளிர் விடியல் பயணம் திட்டமும் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















