America Iran War.?: போராட்டத்தில் 5,000 பேர் பலி.? ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா; விரையும் போர்க்கப்பல்கள்; பதற்றம்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் காமேனி அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த போராட்டங்களின் போது உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் போராட்டக்காரர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர் பலி
மேற்கு ஆசிய நாடான ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டின் கரன்சி மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, விலை வாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காமேனி அரசுக்கு எதிராக, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில், கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த 8-ம் தேதி ஈரான் அரசு, இணையம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை முடக்கி வைத்தது.
மேலும், போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையையும் ஈரான் அரசு களமிறக்கியது. ஆனாலும், அவர்களால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5,000-த்தை கடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் அரசு கூறும் எண்ணிக்கை என்ன.?
இதனிடையே, காமேனி அரசு, போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை முதல் முறையாக வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகள் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதோடு, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 800 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதையும் ஈரான் அரசு மறுத்துள்ளது. மாறாக, மரண தண்டனை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வில்லை என்று கூறியுள்ளது.
ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்கள் - ட்ரம்ப் எச்சரிக்கை
இந்த சூழலில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானில் அரங்கேறிவரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எதற்கும் தயாராக இருப்பதற்காகவே போர்க்கப்பல்கள் அங்கு நிலைப்படுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி திட்டத்தை தொடங்கினாலோ, கைதானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலோ, அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கன் மற்றும் இன்னும் சில போர்க்கப்பல்களும், தென் சீன கடல் பகுதியில் இருந்து, இந்திய பெருங்கடல் வழியாக மேற்காசியா நோக்கி பயணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பிராந்திய பதற்றத்தை கருத்தில் கொண்டு, பிரிட்டனின் டைபூன் போர் விமானப் படைகளும் ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் பதிலடி
இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள ஈரான் தளபதிகள், தங்கள் விரல்கள் துப்பாக்கி விசையின் மீது இருப்பதாகவும், எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















