வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம்! விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950 தொடர்பு கொள்ளலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள்- ஆட்சியர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (21.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பணிகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 29.10.2025 அன்று சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தொகுதி வாக்கு பதிவு அலுவலர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இன்றைய தினம் 18-வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70 செஞ்சி சட்டமன்ற தொகுதி, செஞ்சி 71 மயிலம் சட்டமன்ற தொகுதி, 72 -திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, 73 வானூர் சட்டமன்ற தொகுதி, 74 விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, 75 - விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 76-திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 73 வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரசானூர் மற்றும் பெரம்மை ஆகிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தினை ஒரு வாக்காளருக்கு 2 படிவத்தினை வழங்கப்பட வேண்டும்.
மேலும், வாக்காளர்களை எங்கும் அலைக்கழிக்காமல் வாக்காளர்களின் இல்லத்திற்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று வாக்காளர்களின் சரியான விவரத்தினை கேட்டறிந்து படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு படிவத்தினை வாக்காளர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர் பெயர், பாகம் எண், உறவு முறை போன்ற அனைத்து விவரங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக சரிபார்த்து பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950 என்ற எண்ணிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 70.செஞ்சி 04145-222007, 71.மயிலம் 04147-239449, 72.திண்டிவனம் (தனி) 04147-222090, 73.வானூர் (தனி) 0413-2677391, 74.விழுப்புரம் 04146-222554, 75.விக்கிரவாண்டி 04146-233132, 76.திருக்கோவிலூர் 04153-252316 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட பணிகள் 04.11.2025 தொடங்கிய நிலையில் வருகின்ற 04.12.2025 க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவத்தினை வாக்காளர்களிடம் வழங்கி பூர்த்தி செய்து திரும்பபெற வேண்டும். எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பான முறையில் இப்பணியை செய்து முடித்திட வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வானூர் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.ராஜூ, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கதிர் செல்வி, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (பயிற்சி) செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.





















