மேலும் அறிய
கடத்தப்பட்டதாக கூறி சொந்த மாமாவிடம் பணம் பறிக்க முயற்சி - திட்டம் தோல்வியில் முடிந்ததால் கூண்டோடு சிறை
’’பணத்திற்காக தனது மாமாவிடம் கடத்தல் நாடகமாடிய ஹமீது மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்’’

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க.கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52). இவர் ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து ஆம்பூர் பஜார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது சகோதரி மகனான ஹமீத் (27) மாமாவுடன் இணைந்து வெங்காய விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் 14 ஆம் தேதி இரவு மு.க.கொல்லை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மச்சான் ஹமீது அருகாமையில் உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் ஹமீதின் மாமாவான ஹசேனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஹமீதை கடத்தி உள்ளதாகவும் 10 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் மச்சான் ஹமீதை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ஹமீதின் உடம்பில் கத்தியால் கிழித்து இரத்த காயங்களுடன் ஹமீத் இருப்பதை போல படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி மிரட்டி உள்ளனர். மாமா ஹசேனுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் வாரிசு இல்லாததால் மச்சான் ஹமீதை மகன் போல வளர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ந்து போன மாமா ஹசேன் இது குறித்து 15 ஆம் தேதி அதிகாலை ஆம்பூர் நகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் தனது மச்சான் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.

உடனடியாக ஆம்பூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களுக்கு பணத்தை தருவதாக ஹசேனை சொல்ல வைத்து கடத்தல்காரர்கள் வரச் சொன்ன இடத்திற்கு காவல் துறையினரும் சாதாரண உடையில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் கடத்தல் காரர்களிடம் ஹசேன் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த காவல் துறையினர் கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில் காரோடு சேர்த்து மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் துறையின் விசாரணையில், தனது மாமாவான ஹசேனிடம் வீட்டு மனை வாங்க சுமார் 10 லட்சம் வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க பல முறை பல வழிகளில் முயற்சி செய்தும் பணம் எடுக்க முடியாததால், பணத்திற்காக ஆசைப்பட்டு தனது நண்பர்களை வைத்து தன்னை கடத்தியதாக ஹமீது நாடகமாடியது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து கடத்தல் நாடகமாடிய ஹமீதின் நண்பர்களான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது சித்திக், பையாஸ், அபீத், அப்ரீத் மற்றும் கடத்தல் நாடகம் ஆடிய ஹமீத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. நேற்று மாலை ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் சென்று கொண்டிருந்த வெங்காய வியாபாரி ஹசேன் மீது ஹமீதீன் நண்பர்கள் சித்திக் மற்றும் அப்ரீத் ஆகியோர் மிளகாய் பொடி தூவி ஹசேனை கடத்த முயன்றதாகவும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஹசேனை கடத்த முயன்றது தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து பணம் பறிக்க திட்டம் தீட்டி தன்னை கடத்தி விட்டு தனது மாமாவிற்கு போன் செய்து மிரட்டலாம் என முடிவு செய்துள்ளனர். திட்டம் தீட்டியபடி நேற்றிரவு வீட்டிலிருந்து மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுடன் காரில் ஏறி ஆம்பூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று தனது மாமாவிற்கு போன் செய்து கடத்தி விட்டதாக மிரட்டல் விடுத்ததும் பின்னர் அசேன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் அடுத்த கட்டமாக ஹமீது தனது கையில் பிளேடால் கிழித்து கொண்டு கையில் வெட்டி விட்டதாக கூறி படமெடுத்து மாமா ஹசேனுக்கு அனுப்பி மிரட்டி உள்ளனர்.
பின்னர் பணம் கொடுப்பதாக கூறியவுடன் 10 லட்சதுடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவைத்த நிலையில் எதிர்பாராத விதமாக போலீசாரிடம் சிக்கியதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து பணத்திற்காக தனது மாமாவிடம் கடத்தல் நாடகமாடிய ஹமீது மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து 5 பேரை சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















