Varunkumar IPS : “திருச்சி எஸ்.பி. வருண்குமார் தலை சிதறும்” மிரட்டிய நபரை கொத்தாக தட்டித் தூக்கியது போலீஸ்..!
"பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை”

திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் IPSக்கு சமூக வலைதளம் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது திருச்சி மாவட்ட போலீஸ்
குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் எஸ்.பி. வருண்குமார்
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு குற்ற சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், கலவரங்களை தூண்டும் விதமாகவும் வீடியோ பதிவு செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மூலம் மிரட்டல்
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தோடு வீடியோ பதிவு செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 11.07.2024-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமியை புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமரகாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் துரை (எ) துரைசாமி மற்றும் அவருடன் இருந்தவரை போலீசார் பிடிக்க சென்றபோது துரைசாமி போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் துரை (எ) துரைசாமி இறந்துள்ளார்.

திருச்சி எஸ்பி வருண்குமார் தலை சிதறும் - Instagram-ல் வீடியோ பதிவு
மேலும், இறந்துபோன எம்.ஜி.ஆர் நகர் துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "mgr-nagar- official" முகவரியில் இருந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "திருச்சியில் சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து உள்ளனர். மேலும் கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது குறித்து தீவர விசாரணை மேற்கொண்டதில்,திருச்சி எம்.ஜி.ஆர்.நகர், பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தான் பதிவேற்றம் செய்தது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜபாண்டியினை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று 29.07.2024-ம் தேதி குழுமணி உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ராஜபாண்டியை பிடிக்க சென்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.உடனே போலீசார் அவரை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.

சமூக வலையதளங்களில் தவறான வீடியோ பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து ராஜபாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது, விசாரணை மேற்கொண்ட நீதிபதி வரும் 12.08.2024-ம் திே வரை திருச்சி
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















