உடைக்க மாட்டோம்... அப்படியே தூக்கிச் செல்வோம்: புதுக்கோட்டை மக்கள் அச்சத்திற்கு என்ன காரணம்?
எவர்சில்வர் உண்டியலை தூக்கிக் கொண்டு வெளியே வந்து அங்கு பைக்கில் தயாராக நின்றவர்களுடன் ஏறிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை அதிரடிக்க வைத்துள்ளனர் கோயில் உண்டியல் திருடர்கள். என்ன விஷயம் தெரியுங்களா? தொடரும் இந்த திருட்டுக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபகாலமாக கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில கோயில்களில் ஒரே நேரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஏராளமான கோயில்களில் மர்மநபர்களால் பூட்டுகள் உடைக்கப்பட்டு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறந்தாங்கி அருகில் உள்ள கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள அரியநாயகி அம்பாள் கோயிலில் கடந்த புதன்கிழமை இரவு ஒரு பைக்கில் வரும் 3 மர்ம நபர்களில் ஒரு நபர் மட்டும் இறங்கிச் சென்று கோயிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று எவர்சில்வர் உண்டியலை தூக்கிக் கொண்டு வெளியே வந்து அங்கு பைக்கில் தயாராக நின்றவர்களுடன் ஏறிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
அங்கிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு காசு, பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உண்டியல் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமாக கோயில் நிர்வாகிகள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல இதே நாளில் அன்னவாசல் அருகில் உள்ள வீரப்பட்டி கிராமம் வவ்வாநேரி பிடாரியம்மன் கோயிலுக்கு கடப்பாறை கத்தியுடன் வந்த ஒரு மர்ம நபர் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருட முயன்ற போது வெளியில் சத்தம் கேட்டதால் தப்பி ஓடிவிட்டார். தப்பிச் செல்லும் போது கடப்பாறை, கத்தியை போட்டுவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகி உள்ளது.
இது போல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோயில் உண்டியல் திருட்டுகள் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. குறிப்பாக கோயில் உண்டியல்களை தொடர்ந்து திருடப்படுவதற்கு காரணம் மாசி, பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் அதிகம். இதனால் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவார்கள். இதனால் உண்டியல்களில் அதிகளவு பணம் இருக்கும். இதை குறி வைத்தே கோயில்களின் உண்டியல்களை திருடப்பட்டு வருகிறது என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிசிடிவி கேமராக்கள் இருக்கும் என்று தெரிந்தே “தில்”லாக இதுபோன்று செயல்படுகின்றனர். கோயிலில் வைத்து உண்டியல் பூட்டை உடைத்தால் சத்தம் கேட்டு மக்கள் வந்து விடுவார்கள் என்பதால் உண்டியலையே தூக்கி சென்று வயல் பகுதியில் வைத்து உடைத்து பணத்தை திருடிச் சென்று விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

