பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
. நாங்க எல்லாம் 'பெரு'கனூர், பஞ்சப்பூர். பஞ்சப்பூதங்கள் மாதிரி வளர்ந்துகிட்டே இருப்போம். பஞ்சம் என்பதில் நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் நயினார் நாகேந்திரன்.

பஞ்சப்பூதங்கள் போல் வளர்வோம்... வித்தியாசமான பதில் அளித்த பாஜக தலைவர்
தஞ்சாவூர்: வரவிருக்கிற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும். நாங்கள் பஞ்சப்பூதங்கள் போன்று வளர்ந்து கொண்டே இருப்போம் என்று திருச்சி பஞ்சப்பூரில் மாநாடு பகுதிக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடந்த என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
நேற்று பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி, பஞ்சப்பூர் பகுதிக்கு வருகை தந்து 5,000 கோடி ரூபாய்க்கு மேலான நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதே வேளையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும் பங்கேற்று, வரவிருக்கிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு உரையாற்றினார்.
அதிமுகவின் அனைத்து தலைவர்களும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைவரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, தோழமைக் கட்சிகள் என அனைவரும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளனர். இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும்.
திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் மட்டும் இல்ல, மக்களோடு சேர்ந்து இந்த மாநாடு அமையும். திமுக மாநாடு நடத்திய ஊர் பெயரை பார்த்தீங்கன்னா 'சிறு'கனூர். அது சிறுகிகிட்டே போகும். நாங்க எல்லாம் 'பெரு'கனூர், பஞ்சப்பூர். பஞ்சப்பூதங்கள் மாதிரி வளர்ந்துகிட்டே இருப்போம். பஞ்சம் என்பதில் நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வித்தியாசமான பதிலை அளித்தார் அவர்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு... எந்த ஒரு கூட்டணியும் வலுப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு கூட்டணியும், மேலும் கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம்.
திமுகவில் போற வரவங்கள எல்லாம், ரோட்டுல போறவங்க, தபால் போட வந்தவங்க, ஸ்விக்கியில் கொண்டு வந்து கொடுக்க வந்தவங்க என எல்லாரையும் கட்சியில் சேர்த்து அவங்களுக்கெல்லாம் சீட் கொடுக்குறாங்களே கூட்டணியில் சேர்த்து. அதே மாதிரி புரட்சித் தலைவி அம்மா காலத்துல மந்திரி பதவிகள், பொருளாதார வளர்ச்சிகளை பெற்றவர்கள் எல்லாம், காலாவதியானவங்களை எல்லாம் திமுகவில் சேர்த்து சீட் கொடுக்கிறார்கள். அவர்களே அப்படி செய்யும்பொழுது, எங்கள் கூட்டணி வலுப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.
இது போன்ற தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அது ஒரு விஷயம்தான். மற்றபடி ஒரே கொள்கை இருக்கிறவங்க எல்லாம் ஒரே கட்சியாகவே இருந்திருப்பார்களே. அப்புறம் எப்படி காங்கிரஸ்-ம், கம்யூனிஸ்ட்-ம் சேர்கிறார்கள் கூட்டணியில்? அது மாதிரிதான் இதுவும்.
அதிகாரத்தை பகிர்ந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு... நான் எங்க கூட்டணி இன்னும் பலப்பட வேண்டும் என்ற விருப்பத்தில் சொல்கிறேன். மற்ற விஷயங்களை அண்ணன் ஈ.பி.எஸ் அவர்களும், பாஜகவின் டெல்லி தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள். எங்கள் விருப்பம், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதேநேரத்தில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று சொல்கிறேன்.
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார்கள். போனமுறை ‘அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’ என்று சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.























