‘துள்ளிக்குதிக்கும் தூத்துக்குடி மக்கள்’ 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்தமிழக மக்களின் திட்டம் நிறைவேற்றம்..!
Tamirabarani Karumeniyar Nambiyar River Interlinking: 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்தமிழக மக்களின் கனவு திட்டமான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் நிறைவு

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளை வளமாக்கும் வகையில் ரூ.369 கோடியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கடந்த 2008-ம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை கடந்த 2009 பிப்ரவரி 21-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு, 369 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 2009ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் என இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
இத்திட்டம் நிறைவேறினால், திருநெல்வேலி மாவட்டத்தில், 32 கிராமங்களில் உள்ள 177 ஏரிகள், 2,657 கிணறுகள் பயன்பெறும். துாத்துக்குடி மாவட்டத்தில், 18 கிராமங்களில் 75 ஏரிகள், 2,563 கிணறுகள் பயன்பெறும். நான்கு கட்டடங்களாக, இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தாததால், அ.தி.மு.க., ஆட்சியில் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. திட்ட மதிப்பீட்டு தொகையும் 1,023 கோடி ரூபாயாக உயர்ந்தது. தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் வழக்கு காரணமாக, மொத்தமுள்ள 75.1 கி.மீ., கால்வாயில், 73.5 கி.மீ.,க்கு மட்டுமே பணிகள் முடிந்தன. தற்போது எஞ்சிய, 1.64 கி.மீ., பணிகள் முடிக்கப்பட்டு, திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். கருணாநிதி ஆட்சியில் துவங்கிய இத்திட்டம், அரசியல் மற்றும் வழக்கு காரணங்களால், 15 ஆண்டுகளுக்கு பின் முழுமை பெற்றுள்ளதால், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இத்திட்டத்திற்கு, மத்திய அரசும் 44 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடந்தது. இனிவரும் பருவமழை காலங்களில், இந்த கால்வாய் வழியாக, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு நீர் செல்லவுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
56 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
1. தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.
2. திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கிமீ மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கிமீ என மொத்தம் 75.2 கிமீ நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
3. இந்த திட்டம் மூலம் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் என மொத்தம் 56,933 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
4. திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 117 குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள் முழுமையாக பயன்
பெறும்.
5. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் பயன்பெறும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

