![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு - சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு
மழை வெள்ள சேதம் குறித்த புகைப்படங்கள் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மேலும், அனைத்து இடங்களிலும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சேதங்கள் குறித்து விரிவாக மத்திய குழுவினரிடம் எடுத்துக் கூறினர்.
![தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு - சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு Thoothukudi district central team will again submit the inspection damage assessment report to the central government soon - TNN தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு - சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/21fbd4fc1eea17994c4aa96926defb4f1705114756374571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18-ந் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சாலைகள், பாலங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொது சொத்துக்களும், தனிநபர் சொத்துக்களும் சேதமடைந்து உள்ளன. இந்த மழை வெள்ள சேதம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை துணை இயக்குநர் ரங்கநாத் ஆடம், மத்திய மின் துறை துணை இயக்குநர் ராஜேஷ் திவாரி, மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி ஆகிய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி வந்தனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கூடுதல் நிர்வாக ஆணையர் பிரகாஷ், மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியான தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில் ராஜ், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சேத விவரங்களை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய குழுவினரிடம் விரிவாக விளக்கி கூறினர்.
இதனை தொடர்ந்து மத்திய குழு அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர். மத்திய குழுவின் தலைவரான கே.பி.சிங் தலைமையில் கே.பொன்னுச்சாமி 4 பேர் ஒரு குழுவாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் எஸ்.விஜயகுமார் தலைமையில் ரங்கநாத் ஆடம், கே.எம்.பாலாஜி ஆகிய 3 பேர் ஒரு குழுவாகவும் சென்று ஆய்வு நடத்தினர். கே.பி.சிங் தலைமையிலான முதல் குழுவினர் மழை வெள்ளத்தால் சேதமடைந்த அந்தோணியார்புரம் தேசிய நெடுஞ்சாலை பாலம், முறப்பநாடு குடிநீரேற்று நிலையம், பேரூர் பகுதியில் சாலை, வேளாண் பயிர்கள், ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி, தாமிபரணி ஆற்றின் கரை உடைப்பு, பொன்னன்குறிச்சியில் வீடுகள் சேதம், குடிநீர் பம்பிங் ஸ்டேசன், கடம்பாகுளம், ராஜபதி பகுதியில் சாலை, வேளாண் பயிர்கள், மின் கம்பங்கள், ஏரலில் சாலை, சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு, தாலுகா அலுவலகம், தெற்கு வாழவல்லானில் மின் கோபுரங்கள் சேதம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோன்று எஸ்.விஜயகுமார் தலைமையிலான 2-வது குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி கருத்தபாலம், ஆதிபராசக்தி நகர், ஓம் சாந்தி நகர், மாப்பிளையூரணி, அத்திமரப்பட்டி உப்பாறு ஓடை உடைப்பு, பயிர் சேதம், சாலை சேதம், பழையகாயலில் சாலை சேதம், அகரத்தில் பயிர்கள் சேதம், ஆத்தூர் பாலம், புன்னக்காயலில் மீனவர்களுக்கான பாதிப்பு, மின் கம்பங்கள் சேதம், திருச்செந்தூர் ஆவுடையார்குளம், மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு சென்ற பகுதிகளில் மழை வெள்ள சேதம் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். மேலும், அனைத்து இடங்களிலும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சேதங்கள் குறித்து விரிவாக மத்திய குழுவினரிடம் எடுத்துக் கூறினர். பொதுமக்கள், விவசாயிகளும் மத்திய குழுவினரை சந்தித்து பாதிப்புகள் குறித்து பேசினர். இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய குழுவினர் தங்கள் சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)