ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK BJP TN Politics: அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதிசெய்வதற்காக, தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் சென்னை வரவுள்ளார்.

ADMK BJP TN Politics: பியூஷ் கோயலின் இன்றைய வருகையின்போது தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாம்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, தங்களது கூட்டணியை வலுவானதாக நிரூபிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தை அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தங்களது கூட்டணியில் இடம்பெற உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் மேடையேற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்னும் தொகுதிப்பங்கீடு மற்றும் புதிய கட்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தபடியே உள்ளன. இந்நிலையில் தான் தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் சென்னை வரவுள்ளார்.
சென்னை வரும் பியூஷ் கோயல்:
தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெற உள்ளன? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன? கூட்டணியில் உள்ள கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவது, பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்றிணைப்பது போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய, எதிர்க்கட்சிகளை ஒரே கூட்டணியில் திரட்டுவது அவசியம் என பாஜக கருதுகிறதாம். இதன் காரணமாக, மேற்குறிப்பிடப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கவே பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.
NDA கூட்டணி இறுதியாகுமா?
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பாஜக, அன்புமணி தலைமயிலான பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக் கட்சி, ஜான் பாண்டியன் மற்றும் ஏ.சி. சண்முகம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர், இதுபோக ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணியில் இடம்பெறுவது யார் யார் என்பது வரும் 23ம் தேதிக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இலக்காக கொண்டே இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளாராம். தேமுதிகவை கூட்டணிக்குள் இடம்பெறச் செய்வதும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.
தொகுதிப் பங்கீடு?
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 170 முதல் 180 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டு வருகிறதாம். 64 முதல் 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முன்வந்துள்ளதாம். இதில் பாஜக 50 சீட்டுகள் வரை கேட்டாலும் 30 தொகுதிகளே அதிகம் என எடப்பாடி தரப்பு வலியுறுத்தி வருகிறதாம். அன்புமணி தரப்புக்கு 17 சட்டமன்ற தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. டிடிவி தினகரன் கூட்டணிக்கு வந்தால், ஒற்றை இலக்கில் பெரிய எண்ணில் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள பல சிறிய கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற கூட்டணி கட்சிகள் தங்களது வலிமையை உணர்ந்து தேர்தலில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அதிமுகவின் அறிவுறித்தலாக உள்ளதாம்.























