தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்! கச்சிகுடா ரயில் சேவை நிரந்தரமாகிறது, நேரடி ரயில் இணைப்பு!
கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த ரயில் சேவை தூத்துக்குடி வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த 07191 / 07192 கச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில், இனி நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை தூத்துக்குடி வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாற்றத்தின்படி, 17615 / 17616 என்ற எண்ணில் தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர ரயிலாக இது இயக்கப்படும்.
கச்சிகுடாவில் இருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும், தூத்துக்குடியிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு மூலம், தூத்துக்குடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கிறது. இதனால் மருத்துவ தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட இந்த சேவை, பயணிகளின் வரவேற்பு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து மேலும் வலுப்பெறுகிறது. இந்த புதிய ரயிலின் துவக்க தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தூத்துக்குடி மக்களிடம் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.























