இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... சசிகலாவுடன் சந்திப்பை தவிர்த்த டிடிவி.தினகரன்
TTV Dinakaran : இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. முதலில் வந்த டிடிவி.தினகரன், சசிகலா வருகிறார் என்று தெரிந்தவுடன் அவரை சந்திப்பதை தவிர்த்து புறப்பட்டு சென்றார்.

தஞ்சாவூர்: தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் பரபரப்பை சுமந்து வருகிறது. இந்நிலையில் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த சின்னம்மாவை பார்க்காமல் தவிர்த்து விட்டு டிடிவி தினகரன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எங்க நடந்தது தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிகாட்டில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளது. வைத்திலிங்கம் தற்போது உடல்நலக்குறைவால் தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இவரை நேரில் சென்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதேபோல் சசிகலாவும், வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. முதலில் வந்த டிடிவி.தினகரன், சசிகலா வருகிறார் என்று தெரிந்தவுடன் அவரை சந்திப்பதை தவிர்த்து புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
பின்பு நிருபர்களிடம் டிடிவி.தினகரன் கூறியதாவது: வைத்திலிங்கம் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய அமைச்சர் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். பழனிச்சாமிடம் இரட்டை இலை சின்னம் உள்ளதால் அம்மாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. அம்மாவின் கட்சியை தேர்தலுக்கு பிறகு பழனிச்சாமி மூடு விழா நடத்தி விடுவார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியாக அமைப்பார்கள். பழனிச்சாமி இடமுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு அது மீட்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும் என்றார். மேலும் இரண்டு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது அரசியல் பேசாமலா இருந்திருப்போம் என்று சூசகமாக பதில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
தொடர்ந்து வைத்திலிங்கம் வீட்டிற்கு வந்த சசிகலா வைத்திலிங்கத்திடம் உடல் நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. இந்த இயக்கம் என்பது தலைவர் ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போல் இல்லை. நல்ல ஆட்சி 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அதிமுகவை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கு தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றி விடுவேன் என்பது போல். வரும் 2026 இல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழலில் வைத்திலிங்கத்தை அடுத்தடுத்து டிடிவி.தினகரன், சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சசிகலா வருவதற்கு முன்பே டிடிவி தினகரன் புறப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன இருந்தாலும் அரசியலுக்கு தன்னை அழைத்து வந்த சின்னம்மாவை சந்திப்பதையே டிடிவி. தினகரன் தவிர்க்கிறாரோ என்று ஒரு சாராரும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

