சாலைகளில் காத்திருக்கும் ஆபத்து! அறுவடை இயந்திர மண்: விபத்துகள் அதிகரிக்கும் அபாயத்தால் மக்கள் அச்சம்
தஞ்சாவூர் பகுதியில் அறுவடை இயந்திரங்கள் சாலையில் செல்லும் முன் சக்கரங்களை சுத்தம் செய்ய வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 8 நெம்பர் கரம்பையிலிருந்து பூதலூர் வரை செல்லும் சாலை முழுவதும் அறுவடை இயந்திரங்களின் டயர் மற்றும் பெல்ட் ஆகியவற்றில் ஒட்டிய வயல் மண் பரவி கிடப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை வழியாக ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆவாரம்பட்டி, புதுகல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சென்று வரும். தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகளில் விவசாயிகள் வெகு மும்முரமாக உள்ளனர். அறுவடையும் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

தற்போது இந்த அறுவடைப்பணிளால் சாலைகளில் உருவாகும் புதிய பிரச்சினை பொதுமக்கள் மத்தியில் கவலைக்குரியதாக மாறியுள்ளது. தஞ்சை அருகே 8 நம்பர் கரம்பை முதல் சித்திரக்குடி வரையிலான பகுதியில் வயல்களில் அறுவடை செய்துவிட்டு நேரடியாக சாலைகளில் செல்லும் அறுவடை இயந்திரங்களின் டயர் மற்றும் பெல்ட் ஆகியவற்றில் ஒட்டியுள்ள வயல் மண் சாலை முழுவதும் பரவி விபத்துகளுக்கு காரணமாகி வருகிறது.
குறிப்பாக, ஈரப்பதமான வயல் மண் சாலையில் ஆங்காங்கே திட்டு திட்டாக படர்ந்துள்ளதால் வழுக்கலான நிலையை உருவாக்குகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் இந்த வயல் மண் திட்டு, திட்டாக சாலை முழுவதும் பரவி தெளிவாக தெரியாததால் விபத்துக்குள்ளாகின்றனர்.
இதனால் பொதுமக்கள், குறிப்பாக வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “அறுவடை இயந்திரங்கள் சாலையில் செல்லும் முன் சக்கரங்களை சுத்தம் செய்ய வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். சிறிய அலட்சியம் கூட பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலை நிலவுவதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உள்ளனர். இரவு நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து ஊருக்கு திரும்பும் போது வயல் மண் மேடிட்டு இருப்பது தெரியாமல் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இனியாவது அறுவடை முடிந்த வயல்களில் இருந்து சாலைகளில் இயந்திரங்களை ஏற்றுவதற்கு முன்பாக சக்கரங்களை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும், இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஏற்கனவே அறுவடை இயந்திரங்கள் சாலையில் வாகனத்தை ஏற்றுவதற்கு முன்பாக சுத்தம் செய்த பின்னரே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரப்பதம் உள்ளது என்பதால் பெல்ட் பொறுத்திய அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்திய பின்னர் அதில் அதிகளவு வயல் மண் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. இதை சுத்தப்படுத்தாமல் அப்படியே சாலையில் இயக்கும் போது பெல்ட்டில் ஒட்டியுள்ள வயல் மண் பாளம் பாளமாக சிறிய அளவில் மண் குன்று போல் சாலையில் விழுந்து விடுகிறது. இது வாகன விபத்துக்களுக்கு காரணமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.























