நிம்மதி மூச்சு விடும் மக்கள்... போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! விரைவில் திறப்பு - எது தெரியுங்களா?
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீடாமங்கலம் ரயில்வே கேட் பூட்டப்பட்டு இருக்கும்.

தஞ்சாவூர்: கேட் போடறதுக்குள்ள போகணும்... சீக்கரம்... சீக்கிரம் என்று தஞ்சையிலிருந்து நீடாமங்கலத்தை தாண்டி மற்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் ரயில் வரும் நேரத்தில் அவசரப்படுவதற்கு காரணம் இருக்கு. கேட் போட்டு விட்டால் வெகு நேரம் நிற்கும் நிலையும், நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுதான். இப்போக இதற்கு முற்றுப்புள்ளி விழும் என்கின்றனர் விபரமறிந்த வட்டாரத்தினர்.
டெல்டா மாவட்டத்தில் நீடாமங்கலம் மிக முக்கிய பகுதியாக திகழ்கிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ரயில்வே நாக்பூரை நினைவுபடுத்தும். நாக்பூரில் உள்ள டைமண்ட் ரயில்வே க்ராஸிங்கில் இந்தியாவில் அனைத்து ரயில் வழித்தடங்களும் குறுக்கிடும். இதே போல தமிழ்நாட்டில் ஒரு ரயில் நிலையத்துக்குள் பஸ் செல்கிறது என்றால், அது நீடாமங்கலமாக தான் இருக்கும். இந்த ஊரில் ரயில் நிலையத்தை நடைமேடை இடையில் சாலை அமைக்கப்பட்டு இருக்கும்.

நீடாமங்கலம் வழியாக தினமும் 14 விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் செல்கின்றன. இதேபோல் நான்கு வாராந்திர ரயில்களும், 5 சரக்கு ரயில்களும் நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றன. இதனால் ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் பூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீடாமங்கலம் ரயில்வே கேட் பூட்டப்பட்டு இருக்கும். அதிலும் காலை, மாலை நீடாமங்கலம் ரயில்வே கேட் பூட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிராசிங் ரயில்கள் வந்தால் வெகு நேரம் வாகனங்கள் இருபுறம் தேங்கி நிற்கும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், பிரதான சாலையில் நீடாமங்கலம் அமைந்திருப்பதால், அவசரத்துக்கு தஞ்சாவூர் செல்லும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இதேபோல் தஞ்சாவூரிலிருந்து கொரடாச்சேரி, திருவாரூர், நாகைக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடித்துதான் வந்தது.
இந்த நிலையில் நீடாமங்கலம் இருப்பு பாதை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி கடந்த ஆண்டில் தொடங்கியது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையொட்டி ரூ.78 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு மேம்பால பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேம்பால கட்டுமான பணியை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் பழைய நீடாமங்கலம், சித்தமல்லி பரப்பனமேடு ஆகிய கிராமங்களில் சுமார் 3 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.36 கோடி நஷ்ட ஈடாகவும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மேம்பால பணிகள் தொடங்கப்பட்டதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். எத்தனை ஆண்டுகள் இதுபோல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து இருப்போம். இனி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி விழும் என்று எதிர்பார்த்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் மேம்பால பணிகளும் வெகு வேகமாக நடந்தது. இந்நிலையில் மேம்பால கட்டுமான பணி முடிவடைந்த பின்னர் குழாய் பதித்தல், குடிநீர் குழாய் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தச் சூழலில் நீடாமங்கலம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி துரித கதியில் நடைபெற்ற வருவதாகவும், அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்குள் பாலத்தை திறந்து போக்குவரத்து பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என்றும் மாநில அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் விரைவில் முடிவடைந்தால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பிரச்சினை இருக்காது. தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்பவர்கள் எளிதில் சென்றுவர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






















