![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தஞ்சையில் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி..!
கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மணலில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியாக அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி.
![தஞ்சையில் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி..! Thanjavur: Kallapperampur red lake that steals the mind in Thanjavur TNN தஞ்சையில் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/29/377425b9c93ca4f90f61dc37c72307de1661739378591175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு என சோழர்கள், தண்ணீரை, இயற்கை கொடுத்த பிள்ளையாக பாவித்து, வணங்கி போற்றி வந்துள்ளனர். அப்படி அமைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஏரிதான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரி என்றழைக்கப்படும் செங்கழுநீர் ஏரி.
கல்லணையை கட்டிய கரிகாலன், நீரை பகிரும் தொழில்நுட்பத்தை உணர்த்தி சென்றார். அவரது வழிவந்த ராஜராஜ சோழன், கல்லணையில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை வகுத்து, ஏரிகள், குளங்களை வெட்டி வைத்தார். அவற்றில் ஒன்று தான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப் பெரம்பூர் ஏரி.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழை நீரானது, சிவப்பு நிற மணலில் ஓடி வந்து சேருமிடம் தான், இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியாக அழைக்கப்படும் பழமையான செங்கழுநீர் ஏரி. இந்த ஏரி, 642 ஏக்கர் பரப்பளவில், எட்டு மதகுகளையும், இரண்டு வெள்ள நீர் வடிகால்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கள்ளபெரம்பூர்-1, கள்ளபெரம்பூர் - 2, ராயந்துார், சக்கர சாமந்தம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர் ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் செல்லுகிறது.
கல்லணையில் பிரிந்து வரும் வெண்ணாறு, கச்சமங்கலம் அணையில் இருந்து, ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாக வழிந்தோடி வருவது தான், இதற்கான நீராதாரம். புரிந்து காணப்படும் இந்த கள்ளப் பெரம்பூர் ஏரியில் இரை தேடி ஏராளமான பறவைகள் வருகின்றன. முக்கியமாக நீர் காகம், கொக்கு போன்றவை அதிகளவில் வந்து தங்கள் உணவை உண்ணுகின்றன. மாலை நேரத்தில் சடசடவென பறக்கும் கொக்குகளின் சப்தமும், சிலீரென்று தண்ணீருக்குள் மூழ்கி செல்லும் நீர் காகங்களின் வேகமும் பார்ப்பவர்கள் கண்ணையும், மனதையும் கவரும். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் போல் இங்கும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.
மனதிற்கினிய மாலை நேரத்தில் ஏரியிலிருந்து வரும் குளிர் காற்றும் பறவைகளில் சத்தமும் மனதை லயிக்கச் செய்யும் பூதலூர் - தஞ்சாவூர் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த கள்ளப்பெரம்பூர் ஏரி மனதை ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். குடும்பத்தினருடன் வந்து அமைதியாக ஏரி தண்ணீரின் சலசலப்பையும், பறந்து பறந்து உணவு தேடும் பறவைகளின் ஆர்ப்பரிப்பையும் கேட்டு மனதை லேசாக்கி கொண்டு செல்லலாம்.
செங்கிப்பட்டி வழியாக பூதலூரிலிருந்து கள்ளப் பெரம்பூர் ஏரிக்கு வரலாம். இதே போல் தஞ்சாவூரில் இருந்து பிருந்தாவனம், களிமேடு வழியாக இந்த கள்ளப் பெரம்பூர் ஏரியை வந்தடையலாம். குடும்பத்தினருடன் வந்து பறவைகளின் குதூகலத்தை கண்டு மனம் லயித்து செல்லலாம். தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்று ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)