நெருக்கடி ஏற்படும் எண்ணத்தில்தான் நிதியை குறைக்கின்றனர் - முத்தரசன்
ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழி கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம்.

தஞ்சாவூர்: வேளாண் பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும். நிதியை குறைத்தால் நெருக்கடி ஏற்படும் என்ற எண்ணத்தில் மாநில அரசுக்கான நிதியை குறைக்கிறார்கள். இது கண்டனத்திற்கு உரியது என்று தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27-வது மாநில மாநாடு தஞ்சையில் நடந்தது. இதில் பங்கேற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக அந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. அப்போது வேளாண் பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அதனை இதுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.
தற்போது 3ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8ம் வகுப்பில் செல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழி கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம்.
மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளியில் ஒன்றில் கூட தமிழ் ஆசிரியர்கள் இல்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்றால் அவர்கள் கேட்கும் மொழிக்கு எல்லாம் ஆசிரியர் நியமித்து சொல்லிக் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் இந்தியை திணிக்க தான் பார்க்கிறார்கள். எனவே தான் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
மத்திய அரசு இதனை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால் நெருக்கடி ஏற்படும் என்ற எண்ணத்தில் மாநில அரசுக்கான நிதியை குறைக்கிறார்கள். இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி பயனாளிகளுக்கு குறைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை கொடுக்காததால் 3 மாதமாக ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டம் நிதி, பேரிடர் நிவாரண நிதி என எதையும் வழங்காமல் தமிழகத்தை புறக்கணிப்பது போராட்டத்தை தூண்டுவதாகும். தேர்தல் ஆணைய தலைவர்களை உருவாக்குவதற்கு ஏற்கனவே ஒரு விதி இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தனது பெரும்பான்மையை பயன்படுத்தி தன்னிச்சையாக தலைவரை முடிவு செய்து நியமனம் செய்கிறது. மத்திய அரசு செயல்படுத்தக்கூடிய இந்த முறை என்பது தேர்தலின் மீதும், தேர்தல்முறை மீதும் உள்ள நம்பிக்கையை கெடுப்பதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

