கதவணை கரை உடைப்பை தடுக்க நடவடிக்கை; விவசாயிகள் கோரிக்கை
குமாரமங்கலத்தில் 463 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதவணையில், கரை உடைப்பு ஏற்படாமலிருக்க பக்கவாட்டு தடுப்புச் சுவர்களில் நீளத்தை அதிகரிக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் - ஆதனூர் இடையே ரூபாய் 463.2468 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆறானது, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளையும், சுமார் 22 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன தேவையையும் பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி, அந்த நீரை உபயோகப்படுத்தவும், கடல்நீர் உள்புகாமல் தடுக்கவும், மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் மூலம், 1064 மீட்டர் நீளத்திற்கு 84 கண்வாய்களில் 10 அடி உயரம் இரும்பு பலகைகளை அமைத்து 0.334 டி.எம்.சி.தண்ணீரை தேக்கவும், 307 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடிநீரை செறிவூட்டவும் திட்டமிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கி தற்போது 71 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2004 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போல் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால் கதவணை அடுத்துள்ள பக்கவாட்டுக் கரைகள் பாதிக்காமல் இருக்க, தற்போது அமைக்கப்படும் கான்கிரீட் தடுப்புச் சுவரின் நீளத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து கதவணை அமைக்கும் பணிகள் குறித்து தஞ்சை வெண்ணாறு கோட்ட வடிநில செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதலாக 50 கோடி ரூபாய் இதற்கு செலவாகும் என்றும், அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தெரிவிக்கும்போது குமாரமங்கலம் - ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் புதிய கதவணையால் 22 ஆயிரம் ஏக்கருக்குமேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் நிலையில், இந்த கதவணை அருகே பெரிய அளவில் பூங்கா அமைத்து சுற்றுலாதலமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets