மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆய்வு செய்யமுடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மற்றும் தரங்கம்பாடி தாலூக்காக்களை சேர்ந்த சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு மீனவ கிராமங்களில் பிரதிநிதிகளுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை முழுமையாக அமல்டுத்துவதாக அறிவித்திருந்தார். அதன் பேரில் மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், பழையாறு முதல் தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 9 வது நாளாக இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் உள்ள படகுகள், வலைகள், இஞ்சின்கள் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள முயன்றனர். தகவல் அறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள் அதிகாரிகளை சிறைபிடித்து ஆய்வு பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் தங்கள் அனுமதியின்றி தங்களது படகு மற்றும் வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என கடும் வாக்குவாதம் செய்தனர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கபட்டனர். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர். அவர்களும் அதிகாரிகள் அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கபட்டுள்ளதாகவும், இது குறித்து இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அதுவரை மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது எனக் கூறி உடனே அங்கிருந்து அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகளோ வேறு கிராமத்திலும் ஆய்வு செய்ய முடியாது என்பதால் வேறு வழியின்றி புதுப்பேட்டை கிராமத்திலேயே முகாமிட்டுள்ளனர். இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மீன்வளத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக கடற்கரையில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் படித்து வருகின்றனா். இதுபோன்ற அரசால் தடை செய்த வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, அதிக கடற்பரப்பு மீன் பிடிப்புக்கு உள்படுத்தப்படுகிறது. அத்துடன், பல்வேறு வகையான சிறு மீன்கள் உட்பட அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதுடன், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, மொத்த மீன் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.




















