மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. திருமானூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேல்முருகன் (19). டூரிஸ்ட் வேன் டிரைவர். இவர் பாபநாசம் பகுதிக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவது வழக்கம்.
அப்போது 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வழக்கம் போல் பக்தர்களை வேனில் வேல்முருகன் அழைத்து வந்துள்ளார். அப்போது அவருடன் அவரது நண்பர்களான பாப்பாநாட்டை சேர்ந்த வீரா, நாச்சியார்கோயில் அருகே திருச்சேறை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் கண்ணன் (57) ஆகியோரும் வந்துள்ளனர்.
பின்னர் அந்த மாணவியை சந்தித்த வேல்முருகன் வேனில் செல்லலாம் என்று அழைத்துள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி விட்டு வீரா, கண்ணன் ஆகியோர் உதவியுடன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வேல்முருகன், மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீரா, கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது
தஞ்சாவூர் அருகே தனது 10 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக 2வது கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தனது தாயுடன் அந்த 10 வயது சிறுமி படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி மறுநாள் காலை தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கனிகா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வெற்றிச்செல்வனை போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






















