![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ரேக்ளா ரேஸில் கீழே விழுந்து விபத்தில் சிக்கியும் முதல் பரிசை வென்ற போட்டியாளர்
திருக்கடையூரில் நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயத்தில் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய குதிரையும், ஜாக்கியும் மீண்டெழுந்து முதல் பரிசை தட்டிசென்றனர்.
![ரேக்ளா ரேஸில் கீழே விழுந்து விபத்தில் சிக்கியும் முதல் பரிசை வென்ற போட்டியாளர் contestant who won the first prize after an accident in Thirukkadaiyur Rekla Race TNN ரேக்ளா ரேஸில் கீழே விழுந்து விபத்தில் சிக்கியும் முதல் பரிசை வென்ற போட்டியாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/f4401197d364ae73165a236f1ddd3ddb1674035992736186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.
தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவாக 43ம் ஆண்டாக மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்லை பந்தயத்தில் முன்னதாக சின்னமாடு, நடுமாடு, பெரியமாடு மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் நடைபெற்றது முடிந்தது. தொடர்ந்து குதிரை வண்டிகளுக்கான பந்தயங்கள் பிற்பகல் துவங்கியது. புதுக்குதிரை, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை, என நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. கரிச்சான் குதிரை போட்டியில் மகிமலையாறு பழுதடைந்த சாலை வளைவில் குதிரை வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியும் சீறிப்பாய்ந்து வந்த வேகத்திலும் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்து ஏற்பட்டும் குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் மீண்டும் போட்டியில் களம் கண்டனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பிரான்ஸ்: உலகின் வயதான மனிதர் உயிரிழப்பு… 118 வயதில் உயிரிழந்த லுசைல் ராண்டன் பற்றி தெரியுமா?
இதே போல் நடுக்குதிரைக்கான போட்டியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமாரின் 3-ம் எண் குதிரை உள்ளிட்ட 15 குதிரைகள் பங்கேற்றன. தரங்கம்பாடி வரையிலான எல்லையை அடைந்து மீண்டும் புறப்பட்ட எல்லையை அடைவதற்கு குதிரைகள் சீறிப்பாய்ந்து வந்தன. அனந்தமங்கலம் மகிமலையாறு சாலை வளைவில் திரும்பிய போது பழுதடைந்த சாலையில் 3 -ஆம் எண் குதிரை வண்டி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த குதிரை மற்றும் குதிரையை ஓட்டி வந்த ஜாக்கி பிரகதீஸ்வரன் எழுந்து மீண்டும் போட்டியில் களம் கண்டனர்.
தன்னை முந்தி சென்ற ஐந்தாம் எண் குதிரையை மூன்றாம் எண் குதிரை முந்தி முதல் பரிசை வென்றது. கீழே விழுந்து அடிபட்டாலும் மனம் தளராக குதிரையும், அதனை ஓட்டி வந்த ஜாக்கி பிரகதீஸ்வரனின் தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது அனைவரின் பாராட்டை பெற்றனர். வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோளோடு மட்டுமில்லாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றிக்கனி நம் மடியில் விழும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகியுள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா. முருகன் கேடயமும், ரொக்க பணமும் பரிசாக வழங்கினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)