செய்வோமா... பறவையினங்களை காக்க இதை செய்வோமா!!!
அழகிய காடுகளிலும், வயல்வெளிகளிலும் தனக்கான உணவையும் தண்ணீரையும் பெற்றுவந்த பறவையினங்கள், இப்போது கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் உயிரை இழந்து செத்துக்கிடக்கின்றன.

தஞ்சாவூர்: கோடை வெயில் தாக்கத்திலிருந்து நமக்கே கிறுகிறுக்கிறது. சிறிய பறவையினங்களை நினைத்து பாருங்கள். அவற்றை இந்த கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்றி வாழ்வளிக்க நாம் ஒவ்வொருவரும் வீடுகளின் மேல்பகுதியில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்க கேட்டுக் கொள்கிறோம் என பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வாட்ஸ் ஆப் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மனிதனின் உடல் எடையில் பாதிக்குமேல் நீர் உள்ளது. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற பழமொழியும் நம் வழக்கத்தில் உள்ளது. தண்ணீரை ஆதாரமாகக் கொண்டே நாம் உயிர் வாழ்வதால்தான், வெளியில் சென்று களைத்து வீடு திரும்பியதும் உடனே தண்ணீர் குடிக்கிறோம். நம்வீட்டிற்கு நண்பர்களே, உறவினர்களே வந்த உடனேயே குடிக்கத் தண்ணீர் கொடுப்பதை நாம் பண்பாடாக கொண்டுள்ளோம். காரணம் நமது உடலின் ஆதாரமே தண்ணீரை கொண்டுள்ளது என்பதுதான்.

உயிர் வாழ்வதற்கு மனிதனுக்கு மட்டும் நீர் அவசியம் அல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இதற்கு பறவையினங்களும் விதிவிலக்கல்ல. வீடுகட்டி குடும்பம் நடத்தி வந்த மனிதன், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும், நகர வளர்ச்சியாலும் அடுக்குமாடிகள் என்ற பெயரில் கூடுகட்டி குடும்பம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் காடுகளாகவும், வயல்வெளிகளாகவும் இருந்த நிலப்பரப்புகள் இன்று தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறி விட்டன. மாறியும் வருகிறது.
ஆற்றுப்படுகையில் குடில்கள் அமைத்து வாழ்க்கையைத் தொடங்கிய மனிதர்கள் இன்று தண்ணீருக்காக போராடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமுதாய மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் மனிதர்களை விட பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பறவையினங்கள்தான். ஆற்றோரங்களிலும், அழகிய காடுகளிலும், வயல்வெளிகளிலும் தனக்கான உணவையும் தண்ணீரையும் பெற்றுவந்த பறவையினங்கள், இப்போது கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் உயிரை இழந்து செத்துக்கிடக்கின்றன.
இதைத் தடுப்பதற்காகவும் பறவையினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் பறவைகள் மீது அக்கறைகொண்ட ஆர்வலர்கள் செல்போன்களில் வாட்ஸ் ஆப் மூலம் பறவைகள் வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செய்தியனுப்பி வருகின்றனர். அதில், ``கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டுபோய்க் கிடக்கின்றன. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர் பகுதிகளில் வெப்பத்தால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வதைப்போல், கோடையின் தாக்கத்திலிருந்து பறவையினங்களைக் காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீடுகளின் மேல்பகுதி, மாடி, பால்கனி, முற்றத்தின் மேல்பகுதிகளில் பறவைகளுக்காக ஒரு சிறிய பாத்திரத்தில் தயவுசெய்து தண்ணீர் வையுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த குறுஞ்செய்தியை நீங்கள் உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கட்டாயம் அனுப்பிவையுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து அவற்றை வெப்பத்திலிருந்து காக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி தானே களத்தில் இறங்கி முன்னுதாரணமாக பறவைகளுக்கு உணவு, நீர் அளித்து அதை புகைப்படங்களாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைப் பார்த்தாவது அனைவரும் முன்வந்து பறவைகள் மீது அக்கறை காட்ட வேண்டும என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பறவையினங்களை காக்க தண்ணீரும், சிறிது உணவும் வைப்போமா!!!





















