அதிரடி முடிவு: திருவையாறில் சுயேட்சையாக களமிறங்குகிறாரா கவிஞர் சினேகன்?
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறி தன் சொந்த தொகுதியான திருவையாறு மக்களின் ஆசையை நிறைவேற்றலாமா என ஆலோசித்து வருகிறாராம் கவிஞர் சினேகன்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் சுயேட்சையாக களமிறங்க மக்கள் நீதி மய்யம் கவிஞர் சினேகன் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் உலா வருகிறது. இது உண்மையா என்பதை கவிஞர் சினேகன்தான் கூற வேண்டும்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மக்கள் நீதிமய்யம் தொகுதி பங்கீட்டில் நீண்ட குழப்பம் தொடர்ந்தது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டதாம். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் அவசரக்கூட்டம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு என்பது குறைந்தபட்சம் 5 தொகுதிகள், அதுவும் டார்ச் லைட் சின்னம் என்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம். இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து விட்டு இந்த தேர்தலை புறக்கணிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதாம்.
இந்த தகவல்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.
இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதாக இல்லை. அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்.
எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
கட்சி தலைவரின் முடிவு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். அவர்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்சி தலைவரின் முடிவை அரைகுறை மனதுடன்தான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் சினேகன் தன் சொந்த தொகுதியான திருவையாறு தொகுதியில் இந்த முறை போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்து வந்தது.
ஆனால் வெளியில் இருந்து ஆதரவு என்று கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்ததும், செய்வதறியாது திகைத்து போய் விட்டாராம் கவிஞர் சினேகன். இதனால் வெகுவாக வருத்தத்தில் இருந்த அவரோடு
உடன்பிறந்தவர்களும், அந்த தொகுதி முழுக்க உள்ள அவரது உறவினர்களும், நண்பர்களும் பல்வேறு கட்சிகளின் அரசியல் பிரமுகர்களும், திமுக அதிருப்தியாளர்களும் நம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்குங்கள் நிச்சயம் வென்றுவிடலாம் என கட்டாயப்படுத்துகிறார்களாம்.
எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறி தன் சொந்த தொகுதி மக்களின் ஆசையை நிறைவேற்றலாமா என ஆலோசித்து வருகிறாராம் கவிஞர் சினேகன். ஒரு வேளை இது நடந்தால் சினேகன் வெல்வாரோ இல்லையோ திமுக அந்த தொகுதியில் வெற்றிப் பெறுவது வெகு கடினம் என்கின்றனர் சினேகனின் நெருங்கிய ஆதரவாளர்கள். இது தான் சார்ந்த மக்கள் நீதி மய்யத்திற்கு போதிய சீட்டைக் கொடுக்காத திமுகவை பழிவாங்கும் செயலா? அல்லது தன் சொந்த தொகுதியில் தன் பலத்தை பரிசோதிக்கும் செயலா? என்பது சினேகனுக்கே வெளிச்சம். இதுபற்றி அவர் என்ன செய்ய போகிறார்? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிப்பாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















