கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருச்சி மலைக்கோட்டையில் பிரமாண்ட திரி தயாரிப்பு பணி மும்முரம்
தொன்மை வாய்ந்த மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதியாக மலைக்கோட்டை திகழ்கிறது.

தஞ்சாவூர்: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை கோயிலில் பிரமாண்ட திரி தயாரிக்கும் பணி வெகுமும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரத்தின் முக்கியமான மற்றும் முதன்மையான அடையாளமாக திகழ்கிறது மலைக்கோட்டைதான். திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழ்கிறது. மலைக்கோட்டை கோயில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
தொன்மை வாய்ந்த மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதியாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது. இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது..
திருச்சி மலைக்கோட்டை முதன்முதலாக விஜயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது ஆங்கிலேயர்கள் இதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதற்கு முன்பாக,. பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10ம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின் விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது.
14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்புக்கு பின்னர் இப்பகுதி தில்லி சுல்தான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விஜயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் பிரதிநிதிகளாக செயல்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
மதுரை நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தான் திருச்சி செழித்திருந்தது. அத்துடன் திருச்சி மாநகர் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் அப்போதுதான் உருவானது. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயில் குளத்தையும், முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது.
மலைக்கோட்டையில் மூன்று நிலைகளில் கோயில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர, பல்லவர் கால குடைவரை கோயிலும், பாண்டியர் கால குடைவரை கோயிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
மலைக்கோட்டை குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் இடையே ஏற்பட்ட கடும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இது ஒன்று என நம்பப்படுகிறது. மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயிலை அடையலாம். இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இங்கு இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோயில் ஆகியவை நன்கு புலப்படும்.
இத்தகைய திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வருடம் தோறும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மலைக்கோட்டை உச்சியில் கொப்பரையில் பிரம்மாண்ட திரி அமைக்கப்பட்டு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி அளவில் செவ்வந்தி விநாயகர், தாயுமான சுவாமி மற்றும் மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதற்கான பணியில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் மலைக்கோட்டை உச்சியில் தீபம் ஏற்றப்பட இருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.





















