"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? - சீமான் கேள்வி

புதுச்சேரி: கொளத்தூர் தொகுதியில் போலி ஓட்டுகள் போட்டதாக மத்திய நிதியமைச்சர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று அறிவிப்பீர்களா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவை விற்று வரும் வருவாயில் நலத்திட்டம் என்பது பைத்தியக்காரத்தனம்
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"பிப்ரவரி 7-ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம். அதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மாஹி, ஏனாம் தொகுதியில் போட்டியிட மாட்டோம். புதுச்சேரி மது அங்கீகரிக்கப்பட்ட மாநிலமாக மாறிவிட்டது. தமிழகமே மதுவை நம்பித்தான் ஆட்சி நடத்துகிறார்கள். எந்த வடிவத்தில் வந்தாலும், எப்படி வந்தாலும் மது என்பது ஒரு விஷம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மதுவை விற்று வரும் வருவாயில் நலத்திட்டம் என்பது பைத்தியக்காரத்தனம். விஷத்தைக் கொடுத்துவிட்டு, உனக்கு நல்லது செய்கிறேன் என்பது என்ன மாதிரியான செயல்? அதுதான் இது. அதைப்பற்றிப் பேசிப் பயனில்லை.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடனேயே, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னோம். அதுபோல்தான் புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தவுடன் இதைச் செய்வோம். யூனியன் பிரதேசமான புதுச்சேரி சுற்றுலாத்தலம் என்பதால், வெளிநாட்டவர்களைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். எனவே மொத்தமாக மூட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம்.
நதிநீர் மற்றும் மேகதாது அணை
காவிரியிலேயே நமக்கு எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது தெரிகிறது. உரிய நதிநீரைப் பெற முடியவில்லை. மேகதாதுவில் அணை கட்டினால் நமக்குச் சுத்தமாகத் தண்ணீரே கிடைக்காது. அணை கட்டுவது அவர்களின் உரிமை என்கிறார்கள். அவரவர் நிலத்தில் உள்ள வளங்கள் அவரவருக்கே என்று வந்தால், எப்படி நாடு ஒருமைப்பாடு உள்ள நாடாக இருக்கும்? என்னுடைய நரிமணம் பெட்ரோலை நீங்க எடுத்துக்கிறீங்க. நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்னுடைய வளம். அந்த வளத்திலிருந்து எடுக்கப்படும் மின்சாரத்தை நீங்க எடுத்துக்கிறீங்க. எனக்கு முழுமையான மின்சாரம் இல்லை. அணுஉலை என்னுடைய நிலத்தில் இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், சாவு, அழிவு எனக்கு.
கேரளா என்றால் முல்லைப்பெரியாறு அணை நீர் எனக்கு, கர்நாடகா என்றால் காவிரி நீர் எனக்கு. மேகதாது அணை கட்டினால் தண்ணீர் மொத்தமாக நின்றுவிடும். காங்கிரஸ், பாஜகதான் அங்கு ஆளுகின்றன. இந்த இரு கட்சிகளும் என்னை இந்தியனாக இருக்கச் சொல்கிறது. அதே கட்சிகள் கர்நாடகாவுக்குச் சென்றால், மாநிலக் கட்சியாக மாறிவிடுகின்றனர். கர்நாடகா நலனுக்காக மட்டும் பேசுகின்றனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டாதே என்று சொல்லும் கட்சி தோற்றுவிடும். இங்குள்ள பாஜக, காங்கிரஸ் பேசுமா? மேகதாது அணை கட்டும் காங்கிரஸின் வெற்றிக்காக ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினைத்தான் கேட்க வேண்டும். அணை கட்ட வேண்டும் என்று நிதி ஒதுக்கியவர்களை ஜெயிக்க வைக்க ஓட்டு கேட்டால், அணை கட்டுவார்களா, இல்லையா?
வளர்ச்சி குறித்த பார்வை
இருக்கும் சாலைகளை முறையாகப் போட்டு, பேருந்து மற்றும் இரயில்களை இயக்கினாலே போதும். எது வளர்ச்சி? வயிறு நிறையப் பசியை வைத்து விமானத்தில் பறப்பது வளர்ச்சியா? அனைவரின் வீட்டில் வாகனத்தை வாங்கி ஓட்டும் அளவுக்கு இருக்கிறார்கள். அதை வளர்ச்சி என்று சொல்லலாம். மெட்ரோவில் செல்வதுதான் வளர்ச்சியா? ரூ.72,000 கோடி ஒதுக்கிறீர்கள். பள்ளிக்கூடம் இடிந்து விழுகிறது. 300 குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு கழிவறைதான் இருக்கிறது. எது அடிப்படை என்றே தெரியவில்லை. சாலை முழுவதும் சவக்குழிகளாகத்தான் இருக்கிறது. சின்ன மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பறப்பதற்கே விமானம் இல்லாதபோது, 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் ஏன் கட்டுகிறாய்? சென்னையில் காமராசர், வ.உ.சி துறைமுகங்களில் ஏற்கனவே 50 விழுக்காடுகள் தான் வேலை நடக்கிறது. அப்படியிருக்கையில் 6,111 ஏக்கரில் எதற்குத் துறைமுகம்?
SIR மற்றும் தேர்தல் ஆணையம்
SIR-ஐ எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துகிறார். இங்கு SIR-க்கு பூத் அளவிலான அதிகாரிகளைப் போட்டது திமுகதானே? கொளத்தூரில் போலி வாக்கு பதிவாகி இருக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். இதை நீங்க எப்போது கண்டுபிடிச்சீங்க? இன்னும் தேர்தல் 2 மாதத்தில் வரப்போகிறது, இப்போ சொல்கிறீர்கள். வெற்றி செல்லாது என்று அறிவிக்கத் தயாரா? SIR-ஐ செயல்படுத்தும் ஆட்சி யாருடையது? பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுக இதை எதிர்க்க முடியாது.
10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா?
பூத் அளவிலான அதிகாரியுடன் திமுக கட்சிக்காரர்கள் எதுக்கு கூடவே போறாங்க? ஒருவேளை போகும்போது, என்னுடைய படமோ, தம்பி விஜய்யோட படமோ இருந்தால், அந்த ஓட்டுக்களை எடுத்து விடுவார்களா? வைத்து இருப்பார்களா? 10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? பிப்ரவரி 7-ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியலை அறிவிப்பீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்குள் தேர்தல் தேதியும் அறிவித்து விடுவீர்கள். அப்படியென்றால், மீண்டும் என்னுடைய வாக்கைப் புதுப்பிக்க அவகாசம் எனக்கு இருக்குமா?
தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது சுத்தப் பைத்தியக்காரத்தனம் . யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்களின் விரல்களாக இயங்கும்," இவ்வாறு அவர் கூறினார்.
வழக்குப்பதிவு
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது தேர்தல் ஆணையம் சொல்லுவதை கேட்டுத்தானே ஆக வேண்டும் என்று நிருபர் ஒருவர் கூறினார். இதனால், ஆவேசமான சீமான், "உனக்கு என்ன பிரச்சினை? ஹே, அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா? முதலில் உனக்கு என்ன பிரச்சினை? உன்னை ரொம்ப நாளாகப் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். ஏதோ பைத்தியமாயிட்டு இருக்கே. கேள்வியைக் கேள்வியாக் கேளு. முதலில் நீ மரியாதையா கேள்வி கேளுடா. கேள்வி கேட்கக் கத்துக்கிட்டு வாடா. போடா, மைக்கைத் தூக்கிட்டு கேமராவை எடுத்துட்டு வந்தால நீ பெரிய வெங்காயமாடா? போடா அங்கிட்டு," என்று ஆவேசமாகக் கூறினார். இதையடுத்து, சீமான் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






















