![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு
Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
![Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு Vikravandi Constituency By Election Announcement of Anbumani as Candidate by PMK Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/02a40c6eb91b374565aa98f0bcdb5e121718431613761732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக வேட்பாளர் அறிவிப்பு:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சி.அன்புமணி என்பவர் பாமக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வன்னியர் சங்க நிர்வாகி மற்றும் பாமக மாநில துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சி. அன்புமணி:
2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட சி. அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். அதாவது அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.19 சதவிகித வாக்குகளை இவர் பெற்று இருந்தார். இந்நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட, சி. அன்புமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார்?
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் விவசாய அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தருமபுரி தொகுதிய்ல் போட்டியிட்டு சுமார் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமக சார்பில் சி. அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் யார் போட்டியிட உள்ளார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எப்போது?
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள், ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, வரும் 21ம் தேதி வரை விருப்பமுள்ள நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 24ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் மற்றும் 26ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)