![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Minister Udhayanidhi: "நல்லதுதானே சொல்லி இருக்காரு.." விஜய் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ரியாக்ஷன் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
![Minister Udhayanidhi: Vijay Makkal Iyakkam Education Award Function Minister Udhayanidhi Reaction Minister Udhayanidhi:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/e2f9a2c990e50bd2cb445a92ef3606831686990344531102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா நீலாங்கரையில் நடைபெற்றது. இந்த விழாவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக உதவித்தொகையும், சான்றிதழ்களையும் நடிகர் விஜய் வழங்கினார்.
அந்த நிகழ்வில் நடிகர் விஜய் பேசும்போது, ”நீங்கள்தான் அடுத்த வாக்காளர்கள். அடுத்து வரும் நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். நம்ம கையை வைத்து நம்மளையே குத்துவாங்க. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன். உங்கள் தாய் தந்தையிடம் சொல்லுங்கள். காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று. ஒரே ஒரு வேண்டுகோள் விடுகிறேன். உங்களுக்கு பக்கத்தில் தெருவில் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் சிறிது நேரம் ஒதுக்கி தேர்வில் வெற்றி பெறுவது எவ்வளவு எளிது என்பதை சற்று புரிய வையுங்கள். மாணவர்கள் தவறான எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் பெரியார் காமராஜர் ஆகியோரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என பேசினார்.
மாணவர்கள் மத்தியில் விஜயின் அரசியல் குறித்தான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. விஜயின் பேச்சு குறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டபோது, “காசு வாங்கிக்கொண்டு வாக்களிக்கக்கூடாது என விஜய் மாணவர்களுக்கு நல்லதுதானே கூறியுள்ளார், அதில் என்ன பிரச்னை இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், யார் அரசியலுக்கு வரவேண்டும் யார் அரசியலுக்கு வரக்கூடாது எனக்கூற யாருக்கும் உரிமை கிடையாது எனவும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளது என அறிவிப்பு வெளியானதுமே, நடிகர் விஜய் அரசியலுக்கு வரவதற்கான முன் ஏற்பாடு வேலைகளை செய்கிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜயின் பேச்சு அவரது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)