TVK Conference Date: தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; புதிய தேதி என்ன.? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்படுவதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். புதிய தேதி குறித்து அவர் கூறியது என்ன தெரியுமா.?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, மதுரையில் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பின், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தவெக-வின் 2-வது மாநில மாநாடு, வரும் 18-ம் தேதியிலிருந்து 22-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் நடைபெறும் என கூறியுள்ள ஆனந்த், அந்த தேதி என்ன என்பதை, கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
தவெக-வின் மதுரை மாநாடு
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு. ஆகஸ்ட் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக, ஜூலை மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணியும் நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாநாடு தொடர்பாக அனுமதி கோரும் மனுவை அளித்தார். இந்த சூழ்நிலையில், தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆனந்த் விளக்கம்
இந்த நிலையில், ஜூலை 29-ம் தேதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்க வந்தார். அப்போது, 530 ஏக்கர் நிலங்கள் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமுள்ள நிலம் பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தப்பட உள்ளது எனவும், ஆகஸ்ட் 25ம் தேதி தவெகவினர் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் மேல் வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை கூறியது என்ன.?
இதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பிலிருந்து, மாநாடு நடைபெறும் தேதியைத் தொடர்ந்து, அடுத்த 2 நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருவதால், மாநாடு தேதியை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழ்நிலையில் தான், தற்போது மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பின், மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். ஆனால், அந்த தேதி, வரும் 18-ல் இருந்து 22-ம் தேதிக்குள் இருக்கும் என அவர் கூறியுள்ளர். இதன் மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, மாநாடு முன்கூட்டியே நடைபெற உள்ள தெரியவந்துள்ளது.





















